சஹ்ரானின் சகோதரி உள்ளிட்ட 62 பேருக்கு நீதிமன்றம் கொடுத்துள்ள உத்தரவு
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தெடார்புடைய 62 பேரின் விளக்கமறியல் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் சஹ்ரானின் சகோதரி உள்ளிட்ட சீயோன் தேவாலய தாக்குதலுடன் தொடர்புடைய 62 பேரும் பத்து மாதங்களின் பின்னர் இன்றைய தினம் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போதே அவர்களுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 21.4.2019 உயிர்த்த ஞாயிறன்று இடம் பெற்ற தாக்குதலின் பின்னர் சஹ்ரான் குழுவோடு தொடர்புடையவர்கள் என்றும் இவர்கள் ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரேலியா போன்ற இடங்களுக்குப் பயிற்சிக்காகச் சென்றார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் காத்தான்குடியை சேர்ந்த 63 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் 5 பேர் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் அவர்களில் இருவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் 56 பேர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த 56 பேருடன் குண்டுதாக்குதல் தொடர்பாக வெவ்வேறு 4 வழக்கு இலக்கங்களைக் கொண்ட சஹ்ரானின் சகோதரி மற்றும் அவரின் கணவர், சீயோன் தேவாலய தற்கொலைக் குண்டு தாக்குதலை மேற்கொண்ட ஆசாத்தின் தாயார் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர்கள் 6 உட்பட 62 பேரும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த வெவ்வேறு 4 வழக்கு இலக்கங்களைக் கொண்ட 62 பேரும் நாட்டிலுள்ள பொலநறுவை, அனுதாரபுரம், கேகாலை, திருகோணமலை, போன்ற சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் கடந்த 2020-10-15ம் திகதி நீதிமன்றுக்கு அழைத்துவரப்பட்ட பின்னர் நாட்டில் ஏற்பட்ட கோவிட் தொற்று காரணமாக அவர்கள் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்படாது காணொளி மூலம் அவர்களின் வழக்கு விசாரணையில் தொடர்ந்து விளக்கமறியில் இருந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 10 மாதத்திற்குப் பின்னர் இன்று(05) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்காகப் பலத்துப் பாதுகாப்புக்கு மத்தியில் 7 பஸ்வண்டிகளில் அழைத்துவரப்பட்டு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவர்களை எதிர்வரும் 19 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை குறித்த சந்தேக நபர்களைப் பார்வையிடுவதற்காக அவர்களது உறவினர்கள் நீதிமன்றத்தின் வெளியில் கூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.