தேங்காய் திருடிய 6 பேர் கைது
தேங்காய் திருடிய குற்றச்சாட்டில் குருணாகல் குடா கல்கமுவை பிரதேசத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஆறு இளைஞர்கள் இந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர்களில் 5 பேர் 18 முதல் 22 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதுடன் மற்றைய சந்தேகநபர் 13 வயதான சிறுவன் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்த சந்தேகநபர்கள் இரண்டு வீடுகளில் உள்ள தென்னந்தோட்டங்களில் 1070 தேங்காய்களை திருடியுள்ளனர். இதன் சந்தை பெறுமதி 71 ஆயிரம் ரூபாவுக்கும் மேல் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
விசாரணைகளின் பின்னர் திருடிய தேங்காய்களில் ஒரு தொகை கைப்பற்றப்பட்டுள்ளதுடன் தேங்காயை ஏற்றிச் செல்ல பயன்படுத்தி சிறிய சுமை ஊர்தியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இலங்கையில் தற்போது ஒரு தேங்காய் 130 முதல் 150 வரையான விலையில் விற்பனை செய்யப்படுவதுடன் தேங்காய்க்கு தட்டுப்பாடு நிலவுகிறது.