வீடுகளை இழந்தவர்களுக்கு வழங்கப்படும் 50 இலட்சம் ரூபா கொடுப்பனவு குறித்து வெளியான தகவல்
டித்வா புயலினால் வீடுகளை இழந்த குடும்பங்களுக்கான 50 இலட்சம் ரூபா கொடுப்பனவை வழங்க ஆரம்பிக்கவுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அத்தோடு, குறித்த கொடுப்பனவை ஜனவரி மாதத்தின் முதல் 10 நாட்களுக்குள் வழங்க தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அனர்த்தம் இடம்பெற்று ஒரு மாதம் கடப்பதற்கு முன்னர் சேதமடைந்த வீதிகளில் 99 சதவீதமானவற்றை புனரமைத்து முடிக்க தமது அரசாங்கத்தால் முடிந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
அரசாங்கத்தின் நோக்கம்
மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், வீடுகளை முற்றாக இழந்தவர்கள் ஒரு வருடம் முடிவதற்குள் தமக்கான வீட்டை அமைத்துக்கொள்ள உதவுவதே அரசாங்கத்தின் நோக்கம்.

எவ்வாறாயினும், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பல பிரதேசங்களைச் சேர்ந்த மக்களும் விவசாயிகளும் தமக்கு ஏற்பட்ட சேதங்களுக்கான நஷ்டஈடு இதுவரை உரிய முறையில் கிடைக்கவில்லை எனச் சுட்டிக்காட்டுகின்றனர்.
கடந்த அனர்த்தத்தின்போது மகமன்கடவல குளம் பெருக்கெடுத்ததால் வெள்ளத்தில் மூழ்கிய தமது வீடுகளுக்கு, இதுவரை 25,000 ரூபா அடிப்படை நஷ்டஈடு கூட கிடைக்கவில்லை என மஹமன்கடவல கிராம மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.