இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு தப்பிச் சென்ற மூவர் கைது!
இலங்கையில் பல்வேறு குற்றப் பின்னணி உள்ள சிங்களர்கள் இருவர் உட்பட மூன்று இலங்கையர்கள் சட்டவிரோதமான முறையில் தமிழகத்திற்குள் உள்நுழைய முற்பட்டபோது கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்களை நேற்று(27) தனுஷ்கோடிக்கு அருகிலுள்ள நான்காவது மணல் திட்டில் வைத்து இந்திய கடலோர காவல் படை வீரர் கைது செய்து மரைன் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி கடல் பகுதி இலங்கைக்கு மிக அருகே இருப்பதால் போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்ற பின்னணி கொண்ட நபர்கள் இலங்கையில் இருந்து தமிழகத்திற்குள் ஊடுருவ முயன்று வருகின்றனர்.
கைது
சட்டவிரோத ஊடுருவலை கண்காணித்து தடுக்கும் நடவடிக்கையில் இந்திய கடலோர காவல் படை மற்றும் இந்திய கடற்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் இலங்கையைச் சேர்ந்த குற்ற பின்னணி உள்ள சிலர் தனுஷ்கோடி கடல் வழியாக தமிழகத்திற்குள் ஊடுருவ இருப்பதாக இந்திய கடலோர காவல் படையினருக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
இதனையடுத்து, நேற்று நள்ளிரவில் இருந்து தனுஷ்கோடி முதல் சர்வதேச கடல் எல்லை வரை உள்ள மணல் திட்டு பகுதிகளில் இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ஹோவர் கிராப்ட் ரோந்து கப்பலில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
தனுஷ்கோடிக்கு அருகிலுள்ள நான்காம் மணல் திட்டில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்ற மூன்று பேரையும் சோதனை செய்ததில் அவர்களிடமிருந்து கொடுப்பனவு அட்டை, கடன் அட்டை மற்றும் இலங்கை பணம் 46,000 உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.
இதனையடுத்து, மூவரையும் கைது செய்த இந்திய கடலோர காவல்படையினர் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு அழைத்து சென்று மரைன் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
இதன்போது, முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த இலங்கை தமிழர் கபிலன் (34), நீர் கொழும்பு பகுதியைச் சேர்ந்த சுமித் ரோலன் பெர்னாண்டோ (43), மாதவிலக்கை சாகர குணதிலக (33) ஆகிய இரண்டு சிங்களர் என மூன்று இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்ற பின்னணி
குறித்த நபர்கள் சட்டவிரோதமான முறையில் இரவு 9 மணிக்கு மன்னார் மாவட்டம் பேச்சாளையிலிருந்து படகு மூலம் தலா 2 லட்சம் செலுத்தி நேற்று அதிகாலை சுமார் 4 மணியளவில் தனுஷ்கோடி அடுத்த நான்காம் மணல் திட்டத்தில் வந்து இறக்கியதாகவும், தமிழகத்திற்குள் ஊடுருவி பின் இங்கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு தப்பிச்செல்ல திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது.
மேலும் இலங்கை தமிழர் கபிலன் ஐஸ் போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் சிறையில் இருந்து தற்போது பிணையில் இருப்பதாகவும், சிங்களர்கள் இருவர் மீதும் குற்றப் பின்னணி மற்றும் நிழல் உலக போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் உடன் தொடர்பில் இருந்து வரும் நிலையில் இலங்கையில் “கிளீன் ஸ்ரீலங்கா” என்ற திட்டத்தின் கீழ் கொலை கொள்ளை மற்றும் போதை பொருள் வழக்குகளில் தொடர்புடைய நபர்களை கைது செய்து கடுமையான தண்டனை விதித்து வருவதால் இலங்கையில் உள்ள குற்ற பின்னணி மற்றும் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நபர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதாக இலங்கை பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தனுஷ்கோடி கடல் வழியாக தமிழகத்திற்குள் ஊடுருவ முயன்ற குற்ற பின்னணி உள்ள மூவர் நான்காம் மணல் திட்டத்தில் வைத்து கைது செய்யப்பட்ட நிகழ்வு கடலோர பாதுகாப்பு அதிகாரிகள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே குற்றப் பின்னணி உள்ள இமானுவேல் முஸ்ஹப் மற்றும் அஜித்தன் ஆகிய இருவர் கடல் வழியாக கடந்த சனிக்கிழமை படகில் புறப்பட்டு தமிழகம் வர இருந்த நிலையில் இருவரையும் இலங்கை கடற்படை கைது செய்து வவுனியா சிறையில் அடைத்தது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |