நாட்டில் 9 நாட்களில் மதுபான விற்பனையால் 5 பில்லியன் வருமானம்
இலங்கையில் கடந்த ஒன்பது நாட்களில் மதுபான விற்பனையின் மூலம் மட்டும் ஐந்து பில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
இலங்கை மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் எம்.ஜீ. குணசிறி (M.G.Gunasiri) இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் 21ம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 30ம் திகதி வரையிலான காலப் பகுதியில் இவ்வாறு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் காரணமாக மூடப்பட்டிருந்த மதுபானசாலைகள் கடந்த 21ம் திகதி மீள திறக்கப்பட்டது.
இவ்வாறு கிடைக்கப் பெற்றுள்ள ஐந்து பில்லியன் ரூபா வருமானமானது உள்நாட்டு மதுபான உற்பத்தி நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மதுபானங்களின் விற்பனையினால் ஈட்டப்பட்ட வருமானம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் 30ம் திகதி வரையிலான காலப் பகுதியில் நாடு முழுவதிலும் சட்டவிரோத மதுபான உற்பத்தி, விற்பனை தொடர்பில் மேற்கொண்ட சுற்றிவளைப்புக்கள் மூலம் 30000 சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.