மட்டக்களப்பு இராம கிருஷ்ண மிசனில் 42 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக கோவிட் தொற்றாளர்கள் அதிகளவில் இனங்காணப்பட்டுள்ள நிலையில், மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் 75 கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கே.கிரிசுதன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு, கல்லடியில் உள்ள இராம கிருஸ்ணமிசனின் சுவாமி இருவர் உட்பட 42 பேர் கோவிட் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ள நிலையில், இராம கிருஸ்ணமிசன் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன், அதனுடன் தொடர்புபட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதேநேரம், நேற்றைய தினம் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் பல பகுதிகளில் தொடர்ச்சியாக அன்டிஜன், பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டதாக மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கே.கிரிசுதன் தெரிவித்துள்ளார்.
இதன்போது ,மாமாங்கம் பகுதியில் 21தொற்றாளர்களும், புளியந்தீவு பகுதியில் 09தொற்றாளர்களும், நாவற்குடா கிழக்குப் பகுதியில் 12 தொற்றாளர்களும், மஞ்சந்தொடுவாய் பகுதியில் 06 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை முழுமையாகப் பின்பற்றாவிட்டால் மட்டக்களப்பில் கோவிட் தொற்று பாரியளவில் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் பொதுமக்களை அவதானமாகச் செயற்படுமாறும் சுகாதார பிரிவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.










