அமெரிக்காவில் இந்திய வம்சாவளி எம்.பி.க்கள் 4 பேருக்கு முக்கிய பதவி
அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையின் முக்கிய குழுக்களில் இந்திய வம்சாவளி எம்.பி.க்கள் 4 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எம்.பி.க்களான ராஜா கிருஷ்ணமூர்த்தி (49), அமி பெரா (57) , பிரமிளா ஜெயபால் (57 ), ரோ கன்னா (46) ஆகியோரே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
அந்தவகையில், ராஜா கிருஷ்ணமூர்த்தி, சீனாவின் செயல்பாடுகளைக் கண்காணிப்பதற்காக புதிதாக உருவாக்கப்பட்டுள்ள குழுவின் உயா்நிலை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதிநிதிகள் சபையின் புலனாய்வு
சீனாவின் நடத்தையின் பல்வேறு அம்சங்கள், அமெரிக்காவுக்கும், உலகத்துக்கும் சீனாவின் அச்சுறுத்தல்கள் குறித்த விவகாரங்களை இந்தக் குழு கவனிக்கும்.
அமி பெரா, முக்கியத்துவம் வாய்ந்த பிரதிநிதிகள் சபையின் புலனாய்வு குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தக் குழு மத்திய புலனாய்வு அமைப்பு (சி.ஐ.ஏ), தேசிய புலனாய்வு இயக்குநரின் அலுவலகம் (டி.என்.ஐ), தேசிய பாதுகாப்பு முகமை (என்.எஸ்.ஏ) மற்றும் இராணுவ உளவுத்துறை உள்ளிட்ட நாட்டின் உளவுத்துறை அமைப்பின் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்யும்.
பிரமிளா ஜெயபால், பிரதிநிதிகள் சபையின் நீதித்துறை குழுவின் உறுப்பினராக (குடியேற்றம்) நியமிக்கப்பட்டுள்ளார்.
குடியேற்ற துணைக்குழுவுக்கு இவர் தலைமைத்தாங்குவார். ரோகன்னா, சீன கம்யூனிஸ்ட் கட்சியுடனான அமெரிக்காவின் பொருளாதாரம், தொழில்நுட்பம், பாதுகாப்பு போட்டி தொடர்பான புதிய குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர்கள் 4 பேரும் அதிபர் ஜோ பைடனின் ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.