ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக மூன்று இலங்கையர்களுக்கு எதிராக அமெரிக்காவில் குற்றப்பத்திரிகை தாக்கல்
கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி நடந்த ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பந்தமாக மூன்று இலங்கையர்களுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலீஸ் மாநில சமஷ்டி நீதிமன்றத்தில் இந்த குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், மொஹமட் நுஃபர், மொஹமட் அன்வர் மற்றும் அஹமட் மில்ஹான் ஆகிய மூன்று நபர்களுக்கு எதிராக இந்த குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க சட்டத்திணைக்களம் அறிவித்துள்ளது.
இலங்கையில் தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் நடந்த ஈஸ்டர் ஞாயிறு தொடர் தற்கொலை குண்டு தாக்குதலில் 200க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.
ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் சம்பந்தப்பட்ட இலங்கை தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பின் அடிப்படைவாத குழுவினர் இந்த தாக்குதலை நடத்தியிருந்தனர்.
எனினும் இந்த தாக்குதலின் பின்னணியில் சர்வதேச சக்திகள் இருப்பதாகவும் பேசப்பட்டு வருகிறது.