நாட்டை உலுக்கிய குமுதினி படகுப் படுகொலை நினைவேந்தல் இன்று (Photos)
குமுதினி படகுப் படுகொலையின் 38ஆவது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு யாழ்ப்பாணம் - நெடுந்தீவிலுள்ள குமுதினி நினைவு தூபியில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
குமுதினி படகில் படுகொலை செய்யப்பட்ட 36 பேரின் நினைவாக நெடுந்தீவு இறங்குதுறையிலுள்ள நினைவாலய வளாகத்திலேயே இன்றைய தினம் (15.05.2023) குறித்த நினைவேந்தல் இடப்பெற்றுள்ளது.
இன்றைய தினம் காலை 8.15 மணிக்கு நெடுந்தீவு மாவிலி துறைமுகத்தில் அமைந்துள்ள புனித சவேரியார் ஆலயத்தில் ஆத்ம சாந்தி வேண்டி திருப்பலியும், சம நேரத்தில் மாவிலி துறைமுகத்தில் அமைந்துள்ள வீரபத்திர பிள்ளையார் ஆலயத்தில் ஆத்மா சாந்தி வேண்டிச் சிறப்புப் பூஜையும் நடைபெற்றுள்ளது.
சுடர் ஏற்றி மலர் அஞ்சலி
இதனைத் தொடர்ந்து காலை 9 மணிக்கு குமுதினி படுகொலை நினைவேந்தல் குழுமத்தின் நெடுந்தீவு பிரதேச தலைவர் வி.ருத்திரன் தலைமையில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடப்பெற்றுள்ளன.
நினைவுத்தூபிக்கான நினைவுச் சுடர் ஏற்றல் மற்றும் மலர் அஞ்சலி செலுத்துதல் ஆகிய நிகழ்வுகளுடன் பசுந்தீவு ருத்திரனின் குருதியின் குமுறல்கள் என்ற கவிதை நூலும் வெளியிடப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை முன்னிட்டு முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி
வழங்குகின்ற நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது
இந்நிகழ்வுகளில் நெடுந்தீவு பகுதி மதத்தலைவர்கள், உயிரிழந்தவர்களின்
உறவினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
குமுதினிப் படகு படுகொலை
1985 ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் திகதி நெடுந்தீவு துறைமுகத்திலிருந்து 64 பயணிகளுடன் பயணித்த குமுதினி படகை நடுக்கடலில் வழிமறித்த இலங்கை கடற்படையினர், அதில் பயணித்த குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் என 36 பேரை வெட்டி படுகொலை செய்துள்ளனர்.
மேலும், குழந்தைகள், பெண்கள் உட்பட மொத்தம் 33 பேர் குத்தியும் வெட்டியும் கொல்லப்பட்டனர். முப்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
இந்தப் படுகொலையில் உயிரிழந்துள்ள மக்களுக்காக இன்றைய தினம் காலை நெடுந்தீவு குமுதினி நினைவு தூபியில் அஞ்சலி செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |










