புதுக்குடியிருப்பு படுகொலை 35ஆவது ஆண்டு நினைவு தினம் அனுஸ்டிப்பு
மட்டக்களப்பு - புதுக்குடியிருப்பு படுகொலையின் 35ஆவது ஆண்டு நினைவு தினம் நேற்று மாலை (21.09.2025) ஊர்ப் பொதுமக்களால் அனுஸ்டிக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பழம்பெரும் தமிழ் கிராமமான புதுக்குடியிருப்பு கிராமத்தில் கடந்த 1990, செப்டெம்பர், 21இல் இராணுவமும், முஸ்லிம் ஊர்காவல் படையினரும் இணைந்து கூட்டாக 17 தமிழர்களை தமிழினப்படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
சம்பவ தினமான வெள்ளிக்கிழமை (21/09/1990) அன்று இரவு புதுக்குடியிருப்பு கிராமத்துக்குள் புகுந்த இராணுவமும் இராணுவத்துடன் இணைந்த முஸ்லிம் ஊர்காவல் படையினரும், வீடுகளின் உறங்கிக் கொண்டிருந்த தமிழ் மக்கள் 45 பேரை, தூக்கத்திலிருந்து எழுப்பி விசாரணைக்கென, கடற்கரை பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
தமிழினப்படுகொலை
விசாரணக்கென இவ்வாறு அழைத்துச் சென்றவர்களை நோக்கி இராணுவமும், முஸ்லிம் ஊர்காவல் படையினரும் அவர்களை வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்துள்ளனர்.
பெண்கள், சிறுவர்கள் உட்பட 17 பேரை கொடூரமாகக் கொலை செய்யப்பட்டும் பலர் படுகாயங்களுடனும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதில் கொல்லப்பட்டவர்கள்:
1.சி.கதிராம்ப்போடி
2.பா.நல்லையா.
3.சி.முத்திலிங்கம்
4.மு.இந்திரன்.
5.ஆ.கதிர்காம்ப்போடி
6.வே. புலேந்திரன்.
7.செல்வன்.அ. வரதராசா.
8.செல்வன்.சா.சிவகுமார்.
9.செல்வன்.சா.உதயகைமார்.
10..செல்வி மு.தருமவதி.
11.செல்வி க.கமலேஸ்வரி.
12.செல்வி.லோகநாயகி.
13.கமலேஷ்வரி.
14.செ.சிவசோதி.
15.க.செல்லம்மா.
16.க.அழகம்மா.
17.க.மகேஷ்வரி.
இந்தப்படுகொலையில் 09, ஆண்களும் 08 பெண்களும் மொத்தம் 17, பேர் இதில் சிறு குழந்தைகளும் உள்ளனர். இன்று 2025,செப்டம்பர், 21ல் 35ஆவது ஆண்டு கடந்தும் இந்த இனப்படுகொலைக்கும் இதுவரை நீதி கிடைக்கவில்லையென இறந்தவர்களின் உறவினர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதன்போது இறந்தவர்களின் நினைவாக ஈகை சுடர் ஏற்றப்பட்டு, மெளன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
கடந்த காலங்களில் நினைவு தினத்தை அனுஷ்டிக்க முடியாதவாறு பொலிஸாரின் தடை உத்தரவுகள், புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல்கள் தொடர்ந்தமையால் ஊர் உறவுகளும் நினைவு வணக்கத்தில் கலந்து கொள்ளாத சந்தர்ப்பங்கள் பல வருடங்களாக இருந்தன.















