கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் இதுவரை 35 எலும்புகூட்டு தொகுதிகள் அகழ்வு (Photos)
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது ஆறாவது நாளாக நேற்றையதினம் (25.11.2023) இடம்பெற்றிருந்ததுடன் இதுவரை 35 எலும்புகூட்டு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன் துப்பாக்கி சன்னங்களும் குண்டு சிதறல்களும் மீட்கப்பட்டுள்ளதோடு கையில் அணியப்படும் இலக்கத்தகடு ஒன்றும், மணிக்கூடு ஒன்றும் எடுக்கப்பட்டுள்ளது.
தெளிவான முடிவுகள் நாளை
ஸ்கானர் இயந்திரம் மூலம் குறித்த புதைகுழியானது எவ்வளவு தூரம் பரந்து வியாபித்துள்ளது என கடந்த இரண்டு தினங்களும் பரிசோதனை செய்யப்பட்டிருந்தது.
இதன் முடிவுகள் நேற்றையதினம் அகழ்வு பரிசோதனை பணி நிறைவுற்றதன் பிற்பாடே கிடைக்கப்பெறும் என கூறப்பட்டிருந்ததுடன் தெளிவான முடிவுகளை நாளையதினமே (27.11.2023) பெற முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த புதைகுழியானது வீதியின் ஊடாகவும் ஏனைய பகுதிகள் ஊடாகவும் செல்லக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக முல்லைத்தீவு மாவட்ட விஷேட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ கடந்த தினங்களில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.
மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட அகழ்வு பணி
இன்றையதினம் (26.11.2023) அகழ்வு பணி இடம்பெறாது விடுமுறை வழங்கப்பட்டு நாளையதினம் ஏழாவது நாளாக அகழ்வு பணி இடம்பெற உள்ளது.
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் கடந்த செப்டெம்பர் மாதம் 06 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு செப்டெம்பர் (15) வரை இடம்பெற்றிருந்தது.
இந்த அகழ்வு பணியில் 17 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்ட நிலையிலும், துப்பாக்கி சன்னங்கள், விடுதலைப் புலிகள் அமைப்பினர் பயன்படுத்தும் இலக்க தகடு, உடைகள் உள்ளிட்ட சான்றுப்பொருட்களும் மீட்கப்பட்டிருந்தது.
குறித்த அகழ்வு பணியானது இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் நவம்பர் 20ஆம் திகதி அன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





