சீரற்ற காலநிலையால் யாழ். மாவட்டத்தில் 3,300 குடும்பங்கள் பாதிப்பு: - மாவட்ட அரசாங்க அதிபர்
சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 3,300 குடும்பங்களைச் சேர்ந்த 11,416 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.
தற்போதைய காலநிலை தொடர்பாக யாழ் மாவட்டச் செயலரின் விசேட ஊடக சந்திப்பு இன்று மதியம் யாழ்.மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணத்தில் நேற்று இரவு முதல் பெய்த மழை காரணமாக 243 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவானதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்திருக்கிறது.
இன்று அதிகாலை வெளியான வளிமண்டலவியல் திணைக்களத்தினுடைய அறிக்கையின்படி இன்றும்கூட வட மாகாணத்தில் 150 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
மிகக்குறுகிய காலத்திலேயே மழைவீழ்ச்சி ஏற்பட்டதன் காரணமாக யாழ் மாவட்டத்தில் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டு இருக்கின்றது.
அனேகமான வீதிகள், வீடுகள், பொது இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருப்பதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஊடாக தற்போதைய நிலையில் சேத விபரங்களை மதிப்பீடு செய்து வருகின்றோம்.
அதேபோன்று உள்ளூராட்சி மன்றங்கள் ஒத்துழைத்துச் செயல்பட்டு வருகின்றார்கள். வெள்ள நிலைமை காரணமாக நாங்கள் இன்று காலையில் பாடசாலைகளை ஆளுநரின் அனுமதியுடன் மூடுவதற்குத் தீர்மானித்திருந்தோம்.
வெள்ள நிலைமை காரணமாக மாவட்டத்தில் இதுவரை 3,300 குடும்பங்களைச் சேர்ந்த 11,416 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக யாழ்ப்பாணம், நல்லூர், சண்டிலிப்பாய், சங்கானை, உடுவில், தெல்லிப்பளை, கோப்பாய், சாவகச்சேரி, பருத்தித்துறை, மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவுகளிலேயே இந்த அறிக்கை எமக்கு கிடைக்கப்பெற்றது.
எவ்வாறிருப்பினும் 105 குடும்பங்களைச் சேர்ந்த 339 நபர்கள் மாத்திரமே இடம்பெயர்ந்தவர்கள் என்ற வகையிலே தற்காலிக இடங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
அவர்களுக்குத் தேவையான உணவு வசதிகள் உட்பட ஏனைய வசதிகளை வழங்கும் நடவடிக்கைகளைப் பிரதேச செயலாளர்கள் செய்து வருகின்றனர். நீர் நிலைகள் பல நிரம்பியுள்ளதன் காரணமாகச் சிறுவர்களை மிகப் பாதுகாப்பாகப் பார்த்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளுகின்றோம்.
கடந்த காலங்களில் இவ்வாறான நேரங்களில் பல விபத்துக்கள் ஏற்பட்டிருந்தது. அவற்றை அடையாளப்படுத்தி மக்களுக்குத் தெரியப்படுத்தப் பிரதேச செயலாளர்கள் மற்றும் உள்ளூராட்சி சபையினரைக் கேட்டிருக்கின்றோம்.
மேலும் இந்த வெள்ள நிலைமை தொடர்ந்து ஏற்படுமிடத்து சுகாதார நிலையைக் கவனத்தில் எடுத்து அதற்கான முன்னாயத்தம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆகவே யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம், பிரதேச செயலாளர்கள், உள்ளூராட்சி சபையுடன் இணைந்து வெள்ள நிலைமையைக் கட்டுப்படுத்தக்கூடிய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றோம்.
இதன் பின்விளைவுகளை எதிர்கொள்ளக்கூடிய வகையில் ஆயத்தங்களை மேற்கொண்டு வருகின்றோம். பொதுமக்கள் எமது செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி செயற்படவேண்டும்.
கடல் நீர்மட்டம் உயருவதன் காரணமாக வெள்ள நீர் வடிந்து செல்வதில் தாமதம் ஏற்படுகிறது. தொண்டமானாறு நாவற்குழியில் உள்ள தடுப்பணைகள் திறந்து விடப்பட்டு நீர் வழிந்தோட ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. பொதுமக்கள் வடிகால்களைச் சுத்தப்படுத்தி நீர் வழிந்தோடத்தக்க வகையில் வைத்திருக்க வேண்டும்.
இந்த நிலைமை ஓரிரு நாட்களுக்குத் தொடரலாம் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்திருப்பதால் பொதுமக்கள் இயற்கை அனர்த்தத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அதேவேளை கடல் சீற்றம் கடும் காற்று காரணமாகக் கடலுக்குச் செல்வதைத் தவிர்ப்பது நல்லது என தெரிவித்துள்ளார்.
சீரற்ற காலநிலையால் யாழ். மாவட்டத்தில் ஏற்பட்ட பாதிப்புகள்...
யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக 65 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
இன்று மதியம் 3 மணி வரையிலான பாதிப்பு தொடர்பாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், நேற்று இரவு முதல் பெய்த மழை காரணமாக யாழ் மாவட்டத்தில் இதுவரை 5,908 குடும்பங்களைச் சேர்ந்த 19,987 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக யாழ்ப்பாணம், நல்லூர், சண்டிலிப்பாய், சங்கானை,உடுவில், தெல்லிப்பளை, கோப்பாய், சாவகச்சேரி, கரவெட்டி, பருத்தித்துறை, மருதங்கேணி, வேலணை, ஊர்காவற்றுறை, காரைநகர் பிரதேச செயலர் பிரிவுகளிலேயே இந்த அறிக்கை எமக்கு கிடைக்கப்பெற்றது.
131 குடும்பங்களைச் சேர்ந்த 438 நபர்கள் மாத்திரமே இடம்பெயர்ந்தவர்கள்
என்றவகையிலே தற்காலிக இடங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.



