யாழ்.போதனா வைத்தியசாலையில் 300 இதய அறுவை சிகிச்சைகள் : கனேடியத் தமிழர்களின் பங்களிப்புடன் ஒரு மைல்கல்
கனடாவை தளமாகக் கொண்ட மனிதாபிமான அமைப்பான செந்தில் குமரனின் நிவாரணம் மற்றும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அறுவை சிகிச்சை குழுவும் இணைந்து ஒரு வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளனர்.
கடின இருதய அறுவை சிகிச்சைகளை செய்ய உதவும் ஒரு மருத்துவ இயந்ததிரத்தை நன்கொடையாக யாழ் போதனா மருத்துவமனைக்கு வழங்கியதன் ஊடாக 300 இதய அறுவை சிகிச்சைகளை (Open-heart surgeries) வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர்.
சிகிச்சைக்கு 7,000 டொலர் செலவாகும் நிலையில்
கடந்த 2024 ஜூன் மாதம், யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி, சிரேஷ்ட இதய சிகிச்சை நிபுணர்களான வைத்தியர் லட்சுமன் மற்றும் வைத்தியர் குருபரன் மற்றும் இதய அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் சிவசங்கர் ஆகியோரின் முக்கிய வேண்டுகோளுக்கிணங்க, செந்தில் குமரனின் நிவாரண அமைப்பானது அதிநவீன 'TOE probes' வசதியுடனான 'Echo' இயந்திரத்தை நன்கொடையாக வழங்கியது.

அமெரிக்காவிலிருந்து சுமார் 94,599.20 கனேடிய டொலர் (21.6 மில்லியன் ரூபா) செலவில் இறக்குமதி செய்யப்பட்ட இச்சாதனத்தை, இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வால்ஷ் யாழ் போதனா வைத்தியசாலையின் இதய சிகிச்சை மையத்திடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, வைத்தியர் சிவசங்கர் இந்தத் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி விவரித்தார்.
வழக்கமான ஸ்கேன் முறைகளைப் போலன்றி, இந்த 'TOE probes' வசதியானது அறுவை சிகிச்சையின் போதே இதய அறைகளை ஸ்கேன் செய்யவும், இதற்கு முன் இல்லாத வகையில் மிகத் துல்லியமான காட்சிகளை உடனுக்குடன் வழங்கவும் மருத்துவக் குழுவிற்கு உதவுகிறது.
இது குறித்து வைத்தியர் சிவசங்கர் விளக்குகையில், 'இந்த இயந்திரம் நாம் அறுவை சிகிச்சை செய்யும் முறையையே மாற்றியுள்ளது. இது வழங்கும் தெளிவான காட்சிகள் காரணமாக, பாதிக்கப்பட்ட இதய வால்வுகளை (அவை சீரமைக்கக்கூடிய நிலையில் இருக்கும் போது மட்டும்) செயற்கை வால்வுகள் கொண்டு மாற்றுவதற்குப் பதிலாக, அவற்றைச் சீரமைக்க (Repair) முடிகிறது.
இது எமது நோயாளிகளுக்கு ஒரு சிறந்த வாழ்க்கைத் தரத்தை வழங்குவதுடன், பல சந்தர்ப்பங்களில் 'வார்ஃபரின்' (Warfarin) போன்ற வாழ்நாள் முழுவதுமான இரத்தத்தை மெல்லியதாக்கும் மருந்துகளை உட்கொள்ள வேண்டிய அவசியத்தையும் நீக்குகிறது' என்றார்.
இது குறித்து நிவாரண அமைப்பின் பணிப்பாளர் செந்தில் குமரன் கூறுகையில், "இந்த இயந்திரம் நன்கொடையாக வழங்கப்பட்டதிலிருந்து மேற்கொள்ளப்பட்ட 300 அறுவை சிகிச்சைகள் என்பது காப்பாற்றப்பட்ட 300 உயிர்களைக் குறிக்கின்றது.
ஒரு நோயாளிக்கு தனியார் மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சைக்கு சுமார் 7,000 டொலர் செலவாகும் நிலையில், இச்சாதனம் மூலம் 300 நோயளிகளுக்கு அரசாங்க மருத்துவமனையிலேயே இதய சத்திர சிகிச்சை அளிக்கப்பட்டதன் ஊடாக சுமார் 2.1 மில்லியன் கனேடிய டொலர்கள் ($2,100,000) சேமிக்கப்பட்டுள்ளது.
காத்திருப்புப் பட்டியலைக் குறைக்க
மேலும் அவர் கூறுகையில் 'நிவாரணம் அமைப்பின் நோக்கம் இருமுனை அணுகுமுறையை செயல்படுத்துவதாகும் . ஒன்று, அவசர அறுவை சிகிச்சை தேவைப்படும் குழந்தைகளுக்கு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற உடனடி நிதி உதவியை ஒருங்கிணைத்து வழங்குவது.
மற்றொன்று, ஆயிரக்கணக்கில் நீண்டுகொண்டே செல்லும் காத்திருப்புப் பட்டியலைக் நிரந்தரமாகக் குறைப்பதற்காக, யாழ் போதனா வைத்தியசாலை போன்ற அரசாங்க வைத்தியசாலைகளுக்குத் தேவையான நவீன மருத்துவக் கருவிகளை வழங்கி அவற்றைப் பலப்படுத்துவது எமது அடுத்த முக்கிய பணியாகும்' என்றார்.

இந்த மைல்கல்லானது, இந்த முயற்சிக்குத் தாராளமாக நிதி வழங்கி வலுசேர்த்த கனேடியத் தமிழ் சமூகத்தின் அளப்பரிய கருணைக்கு ஒரு சான்றாகும்.
வைத்தியர் சிவசங்கர் போன்ற அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு இத்தகைய முன்னேறிய தொழில்நுட்ப வசதிகளை வழங்குவதன் மூலம், வட மாகாணத்தின் இதயத்துடிப்பு என்றும் சீராக நிலைத்திருக்க 'நிவாரணம்' அமைப்பு துணை நிற்கிறது.
செந்தில் குமரனின் நிவாரணம் அமைப்பானது கனடாவில் பதிவு செய்யப்பட்ட ஒரு இலாப நோக்கற்ற தொண்டு நிறுவனமாகும். இது குறிப்பாக இளம் சிறுவர்கள் மற்றும் கடுமையான இதய பாதிப்பு உள்ள நோயாளிகள் இலங்கையில் தனியார் துறையின் ஊடாக அவசர இதய அறுவை சிகிச்சைகளைப் பெறுவதற்கு அர்ப்பணிப்புடன் உதவி வருகின்றது.
அத்துடன், ஆயிரக்கணக்கில் நீண்டுகொண்டே செல்லும் காத்திருப்புப் பட்டியலைக் குறைப்பதற்காக, சுகாதாரக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதிலும் இவ்வமைப்பு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
நன்கொடையாளர்கள் வழங்கும் நிதியின் 100வீத பங்களிப்பும் நேரடியாக அறுவை சிகிச்சைகளுக்கும் ஏனைய நிவாரணத் திட்டங்களுக்கும் பயன்படுத்தப்படுவதால், தேவையுள்ள மக்களுக்கு அது முழுமையான பலனைச் சென்றடைவது உறுதி செய்யப்படுகிறது.
ஈரான் மீதான அமெரிக்க தரையிறக்க தாக்குதல் மூலோபாயம் எதுவரைக்கும் 19 மணி நேரம் முன்
சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தியாக நடிக்கும் மனீஷாவின் ஒருநாள் சம்பளம்... எவ்வளவு தெரியுமா? Cineulagam