ஹட்டனில் பாடசாலை மாணவர் ஒருவர் மீது மூர்க்கத்தனமான தாக்குதல்! எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
ஹட்டன் பகுதியில் உள்ள ஒரு பிரதான பாடசாலை வகுப்பறையில் மாணவர் குழுவினால் மாணவர் ஒருவர் கொடூரமான முறையில் தாக்கப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி சந்தேகத்தின் பேரில் மூன்று மாணவர்கள் நேற்று(28.03.2026) பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருவதாக ஹட்டன் பொலிஸ் தலைமையகத்தின் பிரதம பரிசோதகர் டபிள்யூ.ஆர்.ஏ.டி. சுகததாச தெரிவித்துள்ளார்.
குழுக்களுக்கிடையிலான மோதல்
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
சுமார் மூன்று வாரங்களுக்கு முன்பு பாடசாலையில் 11ஆம் வகுப்பு மாணவர்களின் இரண்டு குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது என்று தலைமையகத்தின் பிரதம ஆய்வாளர் கூறியுள்ளார்.

தொடர்ந்து பாடசாலையில் சம்பவம் தீர்க்கப்பட்ட பின்னர், தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படும் ஒரு மாணவர், சம்பவத்தை வீடியோவாகப் பதிவுசெய்து நேற்று(28) தாக்கும் காணொளியை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து பரவிய நிலையில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
மூன்று மாணவர்கள் கைது
அதன் பின்னர் தாக்குதலுக்கு உள்ளானதாகக் கூறப்படும் மாணவரின் தாயார் சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டை விசாரித்து வந்த ஹட்டன் பொலிஸார், தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் மூன்று மாணவர்களையும் சந்தேகத்தின் பேரில் பொலிஸ் காவலில் எடுத்துள்ளனர்.

மேலும், தாக்குதலுக்கு உள்ளானதாகக் கூறப்படும் மாணவனை டிக்கோயா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கைகளையும் எடுத்துள்ளனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களை மேலதிக விசாரணையின் பின்னர் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
