வெளிநாட்டிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையம் வந்தவர், அழைக்க சென்ற மூன்று தமிழர்கள் கைது
வெளிநாட்டிலிருந்து வந்த பயணி மற்றும் அவரை அழைத்துச் செல்ல சென்ற இருவர் என மூன்று தமிழர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து போதைப்பொருளை வெளியே கொண்டு செல்ல முயன்ற வேளையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டிலிருந்து வந்தவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் என்றும் அழைத்துச் செல்ல சென்ற இருவரும் மன்னாரைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மூவர் கைது
விமான பயணி அடிக்கடி வெளிநாடுகளுக்கு பயணங்களை மேற்கொள்ளும் 26 வயதான வர்த்தகர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் இன்று அதிகாலை 12.35 மணிக்கு தாய்லாந்தின் பேங்கொக்கிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
சந்தேக நபர் தனது சூட்கேஸின் அடிப்பகுதியில் இரண்டு பொட்டலங்களில் 02 கிலோகிராம் 116 கிராம் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்தார்.
அவர் கைது செய்யப்பட்ட பின்னர் நடத்தப்பட்ட விசாரணைகளில், இந்த போதைப்பொருள் மன்னார் பகுதிக்கு எடுத்துச் செல்ல நீர்கொழும்பில் உள்ள ஒரு சுப்பர் மார்க்கெட்டிற்கு அருகில் மேலும் இரண்டு பேர் காத்திருந்தது தெரியவந்தது.
போதைப்பொருள்
கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இருவரும் மன்னார் பகுதியைச் சேர்ந்தவர்கள், அவர்களில் ஒருவர் 43 வயதுடையவராகும். அவர் அந்தப் பகுதியில் தொழில்நுட்ப வல்லுநராகப் பணிபுரிகிறார்.
மற்றைய நபர் 36 வயதுடைய ஓட்டுநர் என்பது தெரியவந்துள்ளது. சந்தேக நபர்கள் மூவரும் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.