ஜே.வி.பியின் அரசாங்கத்தில் 25 அமைச்சர்கள்
மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் அமைச்சரவையின் எண்ணிக்கையை 25 ஆக குறைக்க போவதாகவும் துறைசார்ந்த திறமையான அணியினரை உருவாக்க போவதாகவும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
மொறட்டுவை ரந்திய ஹொட்டலில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இது தனி நபரின் மயாஜால செயற்பாடு அல்ல. இதனால், எதிர்காலத்தில் நாங்கள் நாட்டின் அமைச்சரவையை 25 ஆகவும் பிரதியமைச்சர்களின் எண்ணிக்கையை 25க்கு மேல் அதிகரிக்க இடமளிக்க மாட்டோம்.
ஜப்பானுடன் ஒப்பிடும் போது 25 அமைச்சர்கள் என்பதும் அதிகம். வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு எமக்குள்ளது.
ஜப்பானுக்கு இது தேவையில்லை, இருக்கும் பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்வதே அவர்களுக்கு தேவை. இதனால், அதிகளவான அணியை பயன்படுத்தி வீழ்ச்சியடைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும்.
உதவியவர்களை மகிழ்விக்கவே தற்போது அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அதனை நாங்கள் மாற்றுவோம். மாற்றியமைத்து என்ன செய்ய போகிறோம்?.
நாங்கள் சிறந்த அணியை நியமிப்போம். கல்வியை எடுத்துக்கொண்டால் எமக்கு இருக்கும் சிறந்த அணி எது?. உதாரணமாக சுகாதாரத்தை எடுத்துக்கொண்டால், அணியை அறிமுகப்படுத்துவோம். அவர்களே சுகாதாரத்தை மேம்படுத்துவார்கள்.
எமது நளின் ஜயதிஸ்ஸ ஒரு மருத்துவர். எம்மிடம் விசேட மருத்துவ நிபுணர் நிஹால் அபேசிங்க இருக்கின்றார். ராகமை மருத்துவப் பீடத்தின் பேராசியர் நிஷாந்த அபேசிங்க இருக்கின்றார்.
இவர்களே எமது சுகாதார அணியினர். அதேபோல் வெளிநாட்டு விவகாரங்களுக்கான குழு இருக்கின்றது. பேராசிரியர் அனில் ஜயந்த, சுனில் ஹந்துன்நெத்தி, வசந்த சமரசிங்க இவர்கள் எமது பொருளாதார அணியினர்.
நாட்டில் இதுவரை உருவாக்கப்படாத திறமையான, புரிந்துணர்வுள்ள, அர்ப்பணிப்பு, நேர்மையான, மோசடியற்ற அமைச்சரவையை நாங்கள் உருவாக்குவோம். அந்த அமைச்சரவையே நாட்டை ஆட்சி செய்யும் எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.