மலையகத்தில் மண்சரிவு அபாயம்: 25 குடும்பங்கள் பாதிப்பு(Photo)
மலையக பிரதேசங்களில் இன்று அதிகாலை முதல் கடுமையான மழை மற்றும் பலத்த காற்றும் வீசப்பட்டு வருகின்றது.
இடைவிடாது பெய்து வரும் கடும் மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளபெருக்குடன் சிறு சிறு மண்சரிவுகளும் ஏற்பட்டுள்ளது.
வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரொசல்ல ஹைட்ரி பகுதியில் வெள்ள நீர் பெருக்கத்தால் விவசாய நிலங்கள் மற்றும் தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
வெள்ளபெருக்கு
மழை காரணமாக இப்பகுதியில் 21 வீடுகள் வெள்ள நீரினால் நிரம்பியதுடன், மேலும் சில வீடுகளுக்கு சிறிதளவு வெள்ள நீர் உட்புகுந்துள்ளது. கலபொட ஆற்றிற்கு நீர் வழங்கும் ஐட்றி ஆற்றில் நீரின் மட்டம் அதிகரித்தால் வெள்ள நீர் வீட்டினுள் புகுந்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.


தமது வீட்டில் ஒரு அறையேனும் இல்லாமல் வீடு முழுவதும் வெள்ள நீராக காணப்படுவதாகவும், தமது அலுமாரியில் வைத்திருந்த பொருட்கள் மற்றும் வீட்டு உபகரணங்கள் என பல பொருட்கள் வெள்ள நீரில் சேதமாகியுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட 25 குடும்பங்களை சேர்ந்த சுமார் 60ற்கும் மேற்பட்டோரை உறவினர்கள் வீடுகளிலும், அயலவர்களின் வீடுகளிலும், தோட்டத்தில் உள்ள விகாரையிலும் தங்க வைக்கப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்டவர்கள்

அதேவேளையில் பாதிக்கப்பட்டவர்களை இப்பகுதி கிராம சேவகர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
மேலும் இவர்களுக்கு தேவையான சமைத்த உணவுகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை கிராம சேவகர் ஊடாக அம்பகமுவ இடர் முகாமையத்துவ நிலையத்தினால் ஏற்பாடுகள் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் அம்பகமுவ பிரதேச செயலகத்தின் கவனத்திற்கும், மாவட்ட இடர் முகாமைத்துவ மத்திய நிலைய அதிகாரிகள் ஆகியோரின் கவனத்திற்கும் கொண்டுவரப்பட்டுள்ளது.

நேற்று இரவு முதல் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக ஹட்டன் கொழும்பு மற்றும் ஹட்டன் நுவரெலியா ஆகிய பிரதான வீதிகளில் பல இடங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளன.
எனவே இந்த வீதிகளில் பயணம் செய்யும் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக பயணிக்குமாறு போக்குவரத்து பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதேவேளை தொடர்ச்சியாக மழை பெய்து வருவதனால் நுவரெலியா மாவட்டத்தில் பல பிரதேசங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆகவே மலைகளுக்கும் மண் மேடுகளுக்கும் அருகாமையில் வசிப்பவர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்-மலைவாஞ்சன்
வெள்ளையர்கள்தான் பிரித்தானிய குடிமக்கள்... பிரித்தானியாவில் அதிகரித்துவரும் வலதுசாரிக் கொள்கைகள் News Lankasri