நாவலப்பிட்டியில் சாரதியின் கவனக்குறைவால் உதவியாளருக்கு நேர்ந்த கதி..!
நாவலப்பிட்டி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள தனியார் உணவு அங்காடி கிளைக்கு பொருட்கள் ஏற்றி வந்த லொறியின் பின் பகுதியில் சிக்குண்டு, அதன் உதவியாளர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று(01.05.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
குருநாகல் பகுதியிலிருந்து நாவலப்பிட்டியவிலுள்ள தனியார் உணவு அங்காடி கிளைக்கு உணவுப் பொருட்களை ஏற்றி வந்த கனரக லொறி ஒன்று, இன்றைய தினம் பொருட்களை இறக்குவதற்காக பிரதான சாலையிலிருந்து பின்னோக்கி சென்றுள்ளது.
எதிர்பாராத விபத்தில் இளைஞர் உயிரிழப்பு
அப்போது, லொறியின் பின்புறத்திற்கும் அங்கிருந்த கிடங்குச் சுவருக்கும் இடையிலான குறுகிய இடைவெளியில் லொறியின் உதவியாளர் எதிர்பாராத விதமாக சிக்குண்டுள்ளார்.

அதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர் சுமார் 24 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதியை நாவலப்பிட்டி பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சாரதியின் கவனக்குறைவே இந்த விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் நாவலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

