இந்த ஆண்டில் 234,000 பயண ஆவணங்கள் வழங்கப்பட்டுள்ளன
இந்த ஆண்டில் இதுவரையில் சுமார் 234,000 பயண ஆவணங்கள் வழங்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகழ்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஜனவரி மாதம் 1ம் திகதி தொடக்கம் ஒக்ரோபர் மாதம் 28ம் திகதி வரையில் 234,605 பயண ஆவணங்கள் இவ்வாறு வழங்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டில் பயண ஆவணங்கள் பெற்றுக் கொள்ளப்பட்ட எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.கடந்த ஆண்டில் இதே காலப் பகுதியில் 207,697 பயண ஆவணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மேற்கு நாடுகளில் குடியேறும் நோக்கில் பயண ஆவணங்களை பெற்றுக் கொள்ளும் ஓர் போக்கினை அவதானிக்க முடிவதாக குடிவரவு குடியகழ்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் குடியேறுவதற்கு இலங்கையர்கள் அதிக நாட்டம் காட்டுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமைகளை கருத்திற் கொண்டு பலர் நாட்டை விட்டு வெளியேற எத்தனிப்பதாக கொழும்பு ஊடகமொன்று சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, கடந்த காலங்களில் ஒருநாள் சேவையில் ஆயிரம் கடவுச்சீட்டுக்கள் வழங்கப்பட்டதாகவும், தற்பொழுது ஆயிரத்து ஐநூறு கடவுச்சீட்டுக்கள் வழங்கப்படுவதாகவும் குடிவரவு குடியகழ்வுத் திணைக்கள பிரதி கட்டுப்பாட்டாளர் மிலிந்த குமாரசிங்க தெரிவித்துள்ளார்.