சட்டவிரோதமாக கடற்தொழிலில் ஈடுபட்ட 24 இந்திய கடற்தொழிலாளர்களுக்கு விளக்கமறியல்
சட்டவிரோதமான முறையில் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 24 தமிழக மீனவர்களையும் எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
கடற்தொழில் நீரியல் வளத்துறையினரால் , ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் பதில்
நீதவான் சரோஜினி இளங்கோவன் முன்னிலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை 24
மீனவர்களும் முற்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை எதிர்வரும் 12ஆம் திகதி வரை
விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
எல்லை தாண்டி கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 24 இந்திய கடற்தொழிலாளர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
24 பேர் கைது
இந்த கைது நடவடிக்கை நேற்று (28.11.2022) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் - காரைநகர் கடற்பரப்பில் கடற்தொழிலில் ஈடுபட்ட 24 இந்திய கடற்தொழிலாளர்களுடன் ஐந்து படகுகளும் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதற்கமைய கைதான கடற்தொழிலாளர்களை மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்கள் கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு இன்று (29.11.2022) ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் 24 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்ததையடுத்து, இந்த விடயத்தில் தலையிடக் கோரி, தமிழக முதல்வர் ஸ்டாலின், இந்திய வெளியுறவுத்துறை எஸ். ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இலங்கை கடற்பரப்பில் இருந்து இந்திய இழுவை படகுகளை விரட்டியடிப்பதற்காக கடற்படை மற்றும் இலங்கை கடலோர காவல்படையினர் நேற்று மாலை வடக்கு கடற்பரப்பில் விசேட நடவடிக்கையை மேற்கொண்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
இந்திய மீனவர்கள் அனைவரையும் விரைவில் விடுவிக்கவும், இலங்கை பிடியில் உள்ள
படகுகளை விடுவிக்கவும் ஸ்டாலின் தமது கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.