அரசியலமைப்பின் 22 ஆவது திருத்த சட்டம்! மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைப்பு
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை இன்று(23) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர்களான புவனேகா அலுவிஹாரே மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் 9 மனுக்கள் மீதான விசாரணை நேற்று(22) உயர் நீதிமன்றத்தில் ஆரம்பமானது.
மனு தாக்கல்
வினிவிந்த பெரமுனவின் செயலாளர் சட்டத்தரணி நாகாநந்த கொடிதுவக்கு, கலாநிதி குணதாச அமரசேகர, சட்டத்தரணி நுவான் பல்லந்துடாவ, திஸ்ஸ பண்டார ரத்நாயக்க, குலதுங்க மற்றும் பி.பி. தஹநாயக்க உட்பட ஒன்பது பேரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
மனித உரிமைகள் மீறல்
இந்த மனுக்களில் பிரதிவாதியாக சட்டமா அதிபர் குறிப்பிடப்பட்டுள்ளார்.
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்தின் மூலம் அரசியலமைப்பின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவதாக மனுக்களில் கூறப்பட்டுள்ளது.
எனவே, குறித்த சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள சரத்துக்களை நிறைவேற்றுவது
அவசியமானால், அதனை நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை
வாக்குகளாலும், சர்வஜன வாக்கெடுப்பு மூலமாகவும் நிறைவேற்ற வேண்டும் என்ற
தீர்மானத்தை உயர் நீதிமன்றம் வழங்குமாறு மனுக்களில் கோரபட்டுள்ளது.



