22ஆவது திருத்தம் குறித்த உயர்நீதிமன்றின் வியாக்கியானம் நாடாளுமன்றில் அறிவிப்பு (Live)
22ஆவது திருச்சட்டமூலத்தில் அடங்கியுள்ள சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானதாக உள்ளதென உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
22ஆவது திருத்தம் குறித்த உயர்நீதிமன்றின் வியாக்கியானத்தை சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன நாடாளுமன்றில் இன்றைய தினம் அறிவித்தார்.
இதன்போதே உயர் நீதிமன்றத்தின் அறிவிப்பையும் சபையில் தெரிவித்துள்ளார்.
சாதாரண பெரும்பான்மை அல்லது சர்வஜன வாக்கெடுப்பு
அவற்றை நிறைவேற்றுவதற்கு சாதாரண பெரும்பான்மை அல்லது சர்வஜன வாக்கெடுப்பு வேண்டுமென உயர் நீதிமன்றம் தமது வியாக்கியானத்தில் அறிவித்துள்ளதாக சபாநாயகர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி பல தரப்பினர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனேக அலுவிஹாரே மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, முன்வைக்கப்பட்ட விடயங்களை பரிசீலித்ததன் பின்னர், மனுக்களின் விசாரணையை நிறைவு செய்த குழாம், தனது முடிவுகளை சபாநாயகருக்கு சமர்பிப்பதாக கடந்த ஆகஸ்ட் 23 ஆம் திகதி அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
இன்றைய தினத்திற்கான நாடாளுமன்ற அமர்வுகள் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.
மு.ப. 09.30 மணி முதல் மு.ப. 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மு.ப. 10.30 மணி முதல் மு.ப. 10.45 வரை, சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறவீட்டுச் சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் என்பன விவாதமின்றி நிறைவேற்றப்படவுள்ளன.
அதனையடுத்து, மு.ப. 10.45 முதல் பி.ப. 5.30 மணிவரை எதிர்க் கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய “இலங்கையில் குழந்தைகள் மற்றும் தாய்மார்களின் ஊட்டச்சத்து குறைபாடு” தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் நடைபெறவுள்ளது.