யாழில் உயிரிழந்த ஓய்வுபெற்ற தமிழ் இராணுவ அதிகாரிக்கு 21 துப்பாக்கி முழங்க மரியாதை (Photos)
யாழ். - கீரிமலை பகுதியில் உயிரிழந்த ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியான சுந்தரம் அருளம்பலத்திற்கு 21 துப்பாக்கி வேட்டுக்கள் முழங்க இன்றையதினம் மரியாதை செலுத்தப்பட்டுள்ளது.
இவர் கடந்த 1958ஆம் ஆண்டு இராணுவத்தில் கடமையில் இணைந்து, 1980ஆம் ஆண்டு ஓய்வு பெற்றுள்ளார்.
இந்நிலையில், அவர் வயது மூப்பு காரணமாக கடந்த 23.01.2023 அன்று கீரிமலையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
உடல் தீயில் சங்கமமானது
அவரது இறுதிச் சடங்குகள் அவரது இல்லத்தில் நடைபெற்றுள்ளது.
கீரிமலை இந்து மயானத்தில் 21 துப்பாக்கி வேட்டுக்கள் முழங்க இராணுவ மரியாதையுடன் அவரது உடல் தீயில் சங்கமமானது.
இந்த இறுதி நிகழ்வில் யாழ். இராணுவ கட்டளைத் தளபதி மேயர் ஜெனரல் போத்தொட்ட, இராணுவ படைப்பிரிவு அதிகாரிகள், இராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.