இலங்கையில் கோவிட் தொற்றால் 209 வைத்தியர்கள் பாதிப்பு! - மூவர் பலி
நாடு முழுவதும் 209 வைத்தியர்கள் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது, 30 முதல் 40 வைத்தியர்கள் வரை சிகிச்சை பெற்று வருகின்றனர்,
அதே நேரத்தில் ஒரு மருத்துவர் அவசர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட மூன்று வைத்தியர்கள் உயிரிழந்துள்ளனர்.
கேகாலை பொது சுகாதார ஆய்வாளர் மற்றும் ராகம மருத்துவமனையின் இரண்டு மருத்துவர்கள் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
வைத்தியர்களிடையே கோவிட் தொற்று வேகமாகப் பரவி வருவதாகவும், மருத்துவத் துறையில் உள்ள பலரும் தங்கள் நெருங்கிய உறவினர்களை நோய் காரணமாக தனிமைப்படுத்த வேண்டியிருப்பதால் சேவையை விட்டு வெளியேறுவதாகவும் அந்த சங்கம் மேலும் கூறியுள்ளது.
கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மருத்துவர்களில் கொழும்பு தேசிய மருத்துவமனையைச் சேர்ந்த 27 மருத்துவர்கள் மற்றும் ஹோமாகம மருத்துவமனையைச் சேர்ந்த 17 மருத்துவர்கள் அடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, நாடு முழுவதும் உள்ள சுமார் 1000 தாதியர்கள் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.