சிறுவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் 20 தொழில்கள் புதிதாக அடையாளம்
16 முதல் 18 வரையான சிறுவர்களை ஈடுபடுத்தக்கூடாத ஆபத்தான தொழில்களின் பட்டியலில் புதிதாக 20 தொழில்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதன்போது ஆபத்தான தொழில்களுக்கான பட்டியலை 71 வரைக்கும் அதிகரிப்பதற்கான கட்டளைகளை நாடாளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்க அமைச்சரவையின் அனுமதியும் கிடைத்துள்ளது.
அத்துடன், திருத்தப்பட்ட கட்டளைகள் அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் தொழில் உறவுகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதற்கமைய, 16 முதல் 18 வரையான இளைஞர்களுக்கு 51 ஆபத்தான தொழில்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், குறித்த தொழில்களில் ஈடுபடுத்தல், சட்டத்தில் தண்டனைக்குரியதாகவும் குற்றமாக்கப்பட்டுள்ளது.
10 வருடங்களுக்கு முன்னர் அடையாளம் காணப்பட்ட குறித்த கட்டளைகளை மேலும் திருத்தியமைத்து, வீட்டுப்பணி, ஒப்பனை அலங்காரத் தொழில்கள் மற்றும் கணினி மற்றும் ஏனைய இலத்திரனியல் உபகரணங்களுடனான தொழில் உள்ளிட்ட தொழில்களை சமகாலத்திற்கு ஏற்ற வகையில் புதிதாக 20 தொழில்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.