கணவனின் சடலத்திற்காக இரு மனைவிகள் மோதல் - வைத்தியசாலையில் ஏற்பட்ட பரபரப்பு
கொழும்பின் புறநகர் பகுதியான ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த ஒருவரின் சடலத்தைப் பொறுப்பேற்பதில் இரு பெண்களுக்கு இடையில் மோதல் நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக திடீர் மரண விசாரணை அதிகாரி, தலையீட்டு சட்டப்பூர்வமான முதலாவது மனைவிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது.
மீகொட பிரதேசத்தைச் சேர்ந்த 67 வயதுடைய ஓய்வுபெற்ற சுகாதார உதவியாளர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வைத்தியசாலையில் ஏற்பட்ட பரபரப்பு
இவர் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் களுத்துறை பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரைத் திருமணம் செய்திருந்தார். அந்தத் திருமணத்தின் மூலம் இவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

எனினும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் தனது முதல் மனைவியையும் பிள்ளைகளையும் பிரிந்து சென்ற இவர், மீகொட பிரதேசத்தை சேர்ந்த மற்றொரு பெண்ணைத் திருமணம் செய்து அவருடன் வசித்து வந்துள்ளார்.
இரண்டாவது பெண்ணின் முதல் திருமணத்தின் மூலம் மூன்று பிள்ளைகள் இருந்தபோதிலும், உயிரிழந்த நபருக்கும் அந்தப் பெண்ணுக்கும் பிள்ளைகள் இல்லை எனக் கூறப்படுகிறது.
மனைவிகள் மோதல்
திடீர் சுகவீனம் காரணமாக ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், கடந்த 30ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவரது மரண விசாரணை கடந்த 31ஆம் திகதி நடைபெறவிருந்த நிலையில், உயிரிழந்த நபரின் சட்டப்பூர்வமான முதல் மனைவி திருமணச் சான்றிதழுடன் வருகை தந்து சடலத்தை தன்னிடம் ஒப்படைக்குமாறு கோரினார்.
கடந்த 20 வருடங்களாகத் தன்னுடனேயே அவர் வாழ்ந்ததாகக் கூறி, இரண்டாவது மனைவியும் திருமணச் சான்றிதழைச் சமர்ப்பித்து சடலத்திற்கு உரிமை கோரினார். இதனால் வைத்தியசாலை வளாகத்தில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டது.
இந்தச் சிக்கலான நிலையைத் தணிப்பதற்கு ஹோமாகம திடீர் மரண விசாரணை அதிகாரி தலையிட்டார்.
இரண்டாவது பெண்ணுடன் எவ்வளவு காலம் வாழ்ந்திருந்தாலும், சட்டப்பூர்வமாக முதல் மனைவியிடமிருந்து விவாகரத்து பெறாமல் இரண்டாவது திருமணம் செய்திருப்பது செல்லுபடியாகாது.
எனவே, சட்டத்தின்படி சடலத்தைப் பொறுப்பேற்க முதல் மனைவிக்கே முன்னுரிமை உண்டு என அவர் தெரிவித்துள்ளார்.
முத்து மீது தவறு இல்லை என தெரிந்ததும் ரவி செய்த செயல், நீது அடித்தது யார் தெரியுமா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam