பொலிஸார் நியாயமான நீதியை பெற்றுக் கொடுக்கவில்லை: தொடரும் போராட்டம்
முல்லைத்தீவு - கேப்பாப்பிலவு பகுதியில் நீதிவேண்டி இரு குடும்பங்கள் நான்காவது நாளாக தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முல்லைத்தீவு, கேப்பாபிலவு கிராமத்தில் சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபட்டுவரும் அயல் வீட்டு குடும்பஸ்தரினால் குறித்த கிராமத்தில் வசிக்கும் இரு குடும்பங்களுக்கும் தொடர்ச்சியாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அது தொடர்பாக பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டும் எவ்வித நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
தொடர்ச்சியான போராட்டம்
இந்த நிலையில் கேப்பாப்பிலவு மாதிரி கிராமம் பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக நான்கு நாட்களாக தொடர்ச்சியான முறையில் இரு குடும்பங்களை சேர்ந்த 12 பேர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்றைய நாள் நான்காவது நாளாக தொடரும் இவர்களின் போராட்டத்தினை குறித்த பகுதி கிராம அலுவலகரோ, பொலிஸாரோ கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகின்றது.
குறித்த போராட்டத்திற்கான நீதி கிடைக்காமையினால் இரு குடும்பங்களும் வீட்டிற்கு செல்ல முடியாமலும், வீட்டில் இருக்க பாதுகாப்பற்ற நிலையிலும் வீதியிலேயே இருக்கின்றனர்.
குறித்த போராட்டத்தில் ஈடுபடும் இரண்டு குடும்பங்களை சேர்ந்தவர்கள் கருத்து தெரிவிக்கும் போது,
“குறித்த பகுதி கிராம அலுவலரும் தம்மை கண்டு கொள்ளவில்லை, பொலிஸார் நேரடியாக நீதிமன்றத்துக்கே அனுப்புகின்றனர், தமக்கு குழந்தைகள் இருப்பதனால் வீதியில் தொடர்ச்சியாக இருக்க முடியாது,வேலைக்கும் செல்ல முடியாது, வருமானமும் இல்லாமல் போக நாம் வீதியிலையே இருக்கின்றோம்.
எமது பிள்ளைகள் வீதியில் போகும்போது எதிராளிகள் அவமதிக்கின்றனர். எல்லாவற்றிற்கும் ஆதாரம் இருக்கின்றது, எம் உயிர் போக முன்னமே சமாதானமாக வாழ நீதியை பெற்றுதருமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இரு குடும்பத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்ட வேளை வீட்டில் தனிமையில் 14 வயதுடைய இரு சிறுவர்கள் இருந்தபோது பிரச்சினைக்குரிய அயல் வீட்டு குடும்பஸ்தர் அங்கு சென்று போதைப்பொருளை வைத்து விட்டு பொலிஸாரை அழைத்துவந்து குறித்த இரு சிறுவர்களையும் கைது செய்துள்ளனர்” என தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தினை கண்டித்தும், அடாவடியில் ஈடுபடும் அயல் வீட்டுக்காரர் மீது பொலிஸில் முறைப்பாடு செய்தும் நியாயம் கிடைக்கவில்லை எனவும் அதற்கான நீதி தமக்கு வேண்டும் எனவும், வீட்டில் இருப்பதற்கு தமக்கு பாதுகாப்பு இல்லை எனவும் கூறி இரு குடும்பங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |