ஹோர்முஸ் நீரிணையில் கடும் நெருக்கடி: 20,000 கடலோடிகள் சிக்கியுள்ளனர்
உலகின் முக்கியமான கடல் வர்த்தக பாதைகளில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணையில் நிலவும் தற்போதைய சூழ்நிலை, உலகளாவிய கப்பல் போக்குவரத்து துறைக்கு பெரிய சவாலாக மாறியுள்ளது என்று சர்வதேச கடல்சார் அமைப்பு (IMO) தெரிவித்துள்ளது. ,
தற்போது ஹோர்முஸ் நீரிணை பகுதியில் சுமார் 20,000 கடலோடிகள் மற்றும் கப்பல் பணியாளர்கள் சிக்கியுள்ளதாகவும், சுமார் 2,000 கப்பல்கள் இயக்க முடியாமல் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் IMO அமைப்பின் செயலாளர் ஜெனரல் அர்சேனியோ டொமிங்குயஸ் கூறியுள்ளார்.
இந்த கப்பல்கள் நீண்ட காலம் அங்கு நிலைத்திருப்பதால், பணியாளர்கள் மன அழுத்தம், உடல் சோர்வு ஆகியவற்றை எதிர்கொள்கிறார்கள்.

மேலும் கப்பல்களின் இயங்குதன்மைக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களும் குறைந்து வருகின்றன,” என அவர் தெரிவித்தார்.
மேலும், காப்பீட்டு நிறுவனங்கள் இந்நிலையால் ஏற்படும் இழப்புகளை ஏற்க மறுப்பதாகவும், பல நிறுவனங்கள் ஒப்பந்தங்களை ரத்து செய்துள்ளதாகவும் அதிக கட்டணங்களை விதித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், அந்தப் பகுதியில் உள்ள நாடுகள் வழங்கும் உதவி காரணமாக உடனடி மனிதாபிமான நெருக்கடி தற்காலிகமாக தவிர்க்கப்பட்டுள்ளதாகவும், கப்பல்கள் பாதுகாப்பாக வெளியேற மனிதாபிமான வழித்தடம் அமைக்க IMO முயற்சித்து வருவதாகவும் டொமிங்குயஸ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை,, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்வைத்த கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்கும் திட்டம் நிலைத்தன்மையற்றது என அவர் விமர்சித்தார்.
வர்த்தக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படாது என்பதற்கான உறுதி இல்லாததுடன், கப்பல் பணியாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.