நுவரெலியாவில் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்படவுள்ள 1500 ஹெக்டேர் நிலம்! விரைவில் வர்த்தமானி வெளியீடு
நுவரெலியாவில் உள்ள வனப்பாதுகாப்புத் திணைக்களத்திற்கு சொந்தமான, முக்கிய நீர் நிலைகள் மற்றும் மலை பகுதிகளை உள்ளடக்கிய 1,500 ஹெக்டேர் நிலத்தை பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக வர்த்தமானியில் வெளியிட முடிவெடுக்கப்பட்டுள்ளது.
நேற்று (28.08.2026) நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற சிறப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
வர்த்தமானி வெளியீடு
இது தொடர்பில் விரைவில் வர்த்தமானி வெளியிடப்படும் என்று சுற்றுச்சூழல் அமைச்சு தெரிவித்துள்ளது.
நுவரெலியா சுற்றுலா மண்டலத்தில் அமைந்துள்ள தங்கும் விடுதிகள் மற்றும் பிற வணிக நிறுவனங்களுக்கு முறையான வழிமுறையின் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உரிமங்கள்(EPLs) வழங்குவதை விரைவுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் கழிவுநீரை முறையாக அகற்றுவதை உறுதி செய்வதன் மூலம் நீர் நிலைகள் மாசுபடுவதை தடுக்க தொடர்ச்சியான ஆய்வுகளை மேற்கொள்ளவும் இந்த கூட்டத்தின் போது அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
சுற்றுச்சூழல் மற்றும் அபிவிருத்தி பிரச்சினைகளை விரைவாகத் தீர்ப்பதற்காக அனைத்து அரச நிறுவனங்களையும் ஒருங்கிணைக்கவும், அதன் மூலம் நிலச்சரிவுகள் உள்ளிட்ட இயற்கை பேரழிவுகளின் அபாயத்தைக் குறைக்கவும், நீர்நிலைப் பகுதிகளை பாதுகாப்பதன் மூலம் சட்டவிரோத காடழிப்பைத் தடுக்கவும் இந்தக் கூட்டத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்தக் கூட்டத்தில், சுற்றுச்சூழல் பிரதி அமைச்சர் அந்தோன் ஜயகோடி, கல்வி பிரதி அமைச்சர், நுவரெலியா மேயர் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.