பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மாணவனின் உடல்நிலை தொடர்பில் வெளியான தகவல்
மாத்தறை, மிதெல்லவல பிரதேசத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் மீது தவறுதலாக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் கடந்த மாதம் 28 ஆம் திகதி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த சம்பவத்தில் மாத்தறை, திஹகொட நைம்பலாவைச் சேர்ந்த ஹர்ஷ ஹன்சக தேஷான் என்ற 15 வயதுடைய பாடசாலை மாணவர் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரின் துப்பாக்கிச் சூட்டில் தலையில் பலத்த காயமடைந்த நிலையில், கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
மாணவனின் உடல்நிலை
இந்நிலையில், மாணவனின் உடல்நிலை தொடர்பில் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
தலையில் பலத்த காயமடைந்த நிலையில் சிகிச்சைப்பெற்று வந்த மாணவனின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளதாக கராப்பிட்டிய வைத்தியசாலையின் பிரதிப்பணிப்பாளர் ஹர்ஷனி ஒபேசேகர தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் உப பொலிஸ் பரிசோதகர் (57) ஒருவர் கைது செய்யப்பட்டு உடன் நடைமுறைக்கு வரும் வகையில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார்.
இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு தனியான விசாரணையை முன்னெடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.