தடை செய்யப்பட்ட தங்கூசி வலைகள் மீட்பு
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைச்சி குடியிருப்பு பகுதியில் வீடு ஒன்றில் மறைத்து விற்பனை செய்யப்பட்ட 100 கிலோ மதிக்கத்தக்க தடை செய்யப்பட்ட தங்கூசி வலைகள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.
குறித்த வலையின் பெறுமதி ஏறத்தாழ 15 லட்சம் மதிக்கத்தக்கது எனவும், வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தேசிய நீர் உயிரின வளர்ப்பு அதிகார சபையினர் தெரிவித்துள்ளனர்.
கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட தேசிய நீர் உயிரின வளர்ப்பு அதிகார சபை உத்தியோகத்தர் கு.சங்கீதன், முல்லைத்தீவு மாவட்ட நீரியல் வளர்ப்பு விரிவாக்கல் உத்தியோகத்தர்களான யோ.பிரசாத், மா.இளவரசன் ஆகியோர் தேடுதல் மேற்கொண்டுள்ளனர்.
இதன் போது விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 15 லட்சம் மதிக்கத்தக்க 100 கிலோ மதிக்கத்தக்கத் தடை செய்யப்பட்ட தங்கூசி வலை மீட்கப்பட்டதுடன், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான சந்தேகநபர் முல்லைத்தீவு பொலிஸாரிடம் அதிகாரிகளால் பாரப்படுத்தப்பட்டுள்ளதுடன், மீட்கப்பட்ட வலைகள் கிளிநொச்சி அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக முல்லைத்தீவு நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்யப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.