குஜராத் சம்பவம் - 141 பேர் உயிரிழப்பு (Video)
இந்தியாவின் குஜராத்தின் மோர்பியில் பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 141 ஆக உயர்ந்துள்ளது.
சம்பவத்தில் 177 பேர் மீட்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இறந்தவர்களில் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்களும் அடங்குவதாக கூறப்படுகின்றது.
15 மணி நேரத்திற்கும் மேல் தேடுதல் நடவடிக்கை
தற்போது 19 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாலம் இடிந்து விழுந்ததையடுத்து, ஆற்றில் விழுந்த மேலும் 100 பேரை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
15 மணி நேரத்திற்கும் மேலாக தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அருகிலுள்ள பகுதிகளில் வசிக்கும் சுமார் 200 உள்ளூர்வாசிகள் இன்று காலை மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
தேசிய பேரிடர் மீட்புப் படைக்கு கூடுதலாக, இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை மற்றும் கடலோர காவல்படை ஆகியவற்றின் குழுக்களும் இந்த நடவடிக்கைக்கு உதவுகின்றன. இருப்பினும், மோர்பியில் பேரழிவு ஏற்படுவது இது முதல் முறை அல்ல.
1979 ஆம் ஆண்டில், இப்பகுதியில் ஒரு அணை உடைந்ததுடன், 2000ம் ஆண்டு குஜராத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இப்பகுதியும் பாதிக்கப்பட்டது. இதில் சுமார் 20,000 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடி இரங்கல்
இதேவேளை, இந்த துயர சம்பவம் வேதனை அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மேலும், தனது எண்ணங்கள் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் இருப்பதாகவும் அவர் கூறினார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
என் வாழ்நாளில் அரிதாகவே இதுபோன்ற வலிகளை அனுபவித்திருப்பேன்.ஒருபுறம் வலி நிறைந்த இதயம், மறுபுறம் கடமைக்கான பாதை இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசின் முழு ஆதரவையும் உறுதியளித்தார்.