13ஐ நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும்: மனோ கோரிக்கை
இலங்கையில் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு இந்தியப் பிரதமர் தொடர்ச்சியாக அழுத்தங்களைப் பிரயோகித்து வரும் நிலையில், எமது தலைவர்கள் போராடி அதனை நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும் என மலைய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (02.08.2023) யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, ஊடகவியலாளரால் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், இலங்கை அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்ட 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இந்தியப் பிரதமர் மோடி தொடர்ந்தும் பழைய பாணியில் அழுத்தங்களைப் பிரயோகித்து வருகிறார்.
இலங்கை இந்தியா ஒப்பந்தம்
அண்மையில் இலங்கை ஜனாதிபதி இந்தியா சென்ற போது இந்தியப் பிரதமர் 13ஐ நடைமுறைப்படுத்துங்கள், மாகாண சபை தேர்தலை உடனடியாக நடத்துங்கள் எனக் கூறி இருக்கிறார்.
இலங்கை இந்தியா ஒப்பந்தத்தின் பயனாகக் கிடைக்கப்பெற்ற 13ஆவது திருத்தம் வடக்கு கிழக்கு ஒன்றாக இணைந்திருந்த போது வழங்கப்பட்டது.
ஆனால் தற்போது வடக்கு, கிழக்கு ஒன்றாக இல்லை. அது மட்டுமல்லாது பதின்மூன்றில் இருந்த அதிகாரங்கள் பல வர்த்தமானி மூலம் மத்திக்கு எடுக்கப்பட்டமை தவறான விடயம். அதை இந்தியாவும் பார்த்துக் கொண்டிருக்கிறது.
இந்தியா புதிதாக அழுத்தங்களை வழங்கவில்லை தொடர்ச்சியாகவே பதின்மூன்றை நடைமுறைப்படுத்துமாறு கூறி வருகின்ற நிலையில், இந்தியா எமக்குத் துணை வர முடியுமே அல்லாமல் நாம் தான் போராடி உரிமைகளைப் பெற வேண்டும்.
ஆகவே வடக்கு கிழக்கு தமிழர்கள் எமது உறவுகள் நாம் ஒரே இரத்தம் ஒன்றாகக் குரல் கொடுப்பதற்கு மலைய மக்கள் முன்னணி தயாராக இருக்கிறது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





கேரளாவில் நிற்கும் பிரித்தானிய F-35 போர் விமானம்: இந்தியாவிற்கு லட்சங்களில் கிடைக்கும் வருமானம் News Lankasri
