புத்தாண்டு காலத்தில் மதுபான விற்பனை நிலையங்களை மூட உத்தரவு
தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு, எதிர்வரும் ஏப்ரல் 13 மற்றும் 14 ஆகிய இரண்டு தினங்களுக்கு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மதுவரி ஆணையாளர் நாயகம் எம்.பி.என்.ஏ. பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.
அரசின் அனுமதியுடன் இயங்கும் மதுபான விற்பனை நிலையங்கள், ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் கரோக்கி விடுதிகள் உள்ளிட்ட மதுபானம் விற்பனை செய்ய அனுமதி பெற்ற அனைத்து இடங்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த உத்தரவை மீறி எவரேனும் மதுபான விற்பனையில் ஈடுபட்டால், அவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்பட்டிருக்கும் இந்த இரண்டு தினங்களில், சட்டவிரோத மதுபான விற்பனை அல்லது கடத்தல்கள் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் 1913 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், புத்தாண்டு காலத்தில் இடம்பெறும் சட்டவிரோத மதுபான வர்த்தகங்களை முறியடிப்பதற்காக காலி, அனுராதபுரம், கண்டி, குருநாகல் உள்ளிட்ட நாடளாவிய ரீதியில் உள்ள மதுவரி விசேட அதிரடிப்படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் மதுவரி ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.