முல்லைத்தீவில் 11 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தில் இரண்டு பிரதேசங்களை சேர்ந்த 11 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து இன்று விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி அறிவித்துள்ளார்.
குறித்த மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 9 கிராமங்களும்,கரைதுறைப்பற்று பிரதேசத்தில் இரண்டு கிராமங்களிலும் கடந்த 17 ஆம் திகதி அதிகளவான கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட நிலையில் தனிமைப்படுத்தப்பட்டது.
இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட 11 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து இன்று விடுவிக்கப்பட்டுள்ளது.
எனினும் முல்லைத்தீவு மாவட்டத்தில் பயணத்தடை தொடர்ந்து வரும் நிலையில் வீதிகளில் படையினர்,பொலிஸார் மக்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையிலும் பயணத்திற்கான அனுமதியினை பரிசோதிக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை புதுக்குடியிருப்பில் இயங்கி வந்த ஆடைத்தொழிற்சாலை ஊடாக கோவிட் பரவல் தீவிரமடைந்துள்ளதை தொடர்ந்து ஆடைத்தொழிற்சாலை கடந்த 17 ஆம் திகதி மூடப்பட்ட நிலையில், மீண்டும் இன்று (07.06.21) இயங்கவுள்ளதாக பணியாளர்களுக்கு நிர்வாகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதற்கு பலரும் எதிர்ப்பினை வெளிப்படுத்தி வந்துள்ளதுடன், இன்று அதிகாலை குறித்த ஆடைத்தொழிற்சாலை நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்க சென்றவர்களை பொலிஸார் விரட்டி உள்ளதுடன், 10 பேரை கைது செய்துள்ளனர் .
இவ்வாறு கைதாகிய புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உப தவிசாளர் க.ஜெனமேயந் உள்ளிட்ட கிராம அபிவிருத்தி சங்கத்தின் நிர்வாகிகள், 06 பெண்கள் என 10 பேரை கைது செய்தமைக்கு புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உறுப்பினர்கள் கடும் கண்டனத்தினை வெளியிட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் கோவிட்19 சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளின் பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, புதுக்குடியிருப்பில் வணிக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆடைத்தொழிற்சாலையினை எவ்வாறு இயங்கவிடுவது என்ற கேள்வி வர்த்தகர் மத்தியில் எழுந்துள்ளது.
இந்நிலையில், கோவிட் பரவல் உள்ள புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் நிலமைகளை கட்டுக்குள் கொண்டு வரும் வரை ஆடைத்தொழிற்சாலையினை இயங்க விட வேண்டாம் என புதுக்குடியிப்பு வணிகர் சங்கத்தினால் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் வணிகர் சங்கத்தலைவர் நவநீதன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக குறித்த ஆடைத்தொழிற்சாலையினை மீளவும் இயக்குவதற்கான அனுமதியினை புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் வழங்கியுள்ளனர்.
கோவிட் 19 தொற்றில் இருந்து குணமடைந்த அல்லது தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட அல்லது பி.சி.ஆர் பரிசோதனையில் தொற்று அறியப்படாதவர்களை கொண்டு தொழிற்சாலையினை இயக்கலாம் என்றும், மேலும் பல சுகாதார விதிமுறைகள் அடங்கிய கடிதமொன்று ஆடைத்தொழில்சாலை நிர்வாகத்திடம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளது.