சமூகத்தில் சுற்றித்திரியும் 10 ஆயிரம் கோவிட் தொற்றாளர்கள்! இலங்கை மருத்துவ சங்கம் எச்சரிக்கை
பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதன் பிரதிபலனை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் குறைந்தது மேலும் சுமார் ஒரு மாத காலம், பயணக்கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
பொருளாதார ரீதியாக எந்தளவு பாதிப்பு ஏற்பட்டாலும் இன்னும் ஒரு மாத காலத்திற்காவது பயணக் கட்டுப்பாட்டை அமுல்படுத்தவில்லை என்றால், அதனால், ஏற்படும் பிரதிபலன்களை பயங்கரமாக இருக்கக் கூடும் என அந்த சங்கத்தின் தலைவர் விசேட மருத்துவ நிபுணர் பத்மா குணரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் நடந்துக்கொள்ளும் விதம் குறித்து மகிழ்ச்சியடைய முடியாது. சில நபர்கள் பொறுப்பற்ற வகையில் செயற்படுகின்றனர்.
பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதன் மூலம் சிறந்த பிரதிபலனை பெற வேண்டுமாயின் மக்களின் ஒத்துழைப்பும் கட்டாயமானது. தினமும் சுமார் 3 ஆயிரம் கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்.
எனினும் அடையாளம் காணப்படாத 10 ஆயிரம் தொற்றாளர்கள் சமூகத்தில் இருக்கக் கூடும். இதனடிப்படையில் எதிர்வரும் நாட்களில் தினமும் அடையாளம் காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும்.
இன்னும் மூன்று நான்கு வாரங்களுக்கு தினமும் அடையாளம் காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறையாது எனவும் பத்மா குணரத்ன குறிப்பிட்டுள்ளார்.