திருகோணமலை மாவட்டத்தில் 08 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்
திருகோணமலை மாவட்டத்தில் எட்டு புதிய கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந் தெரிவித்துள்ளார்.
இத்தகவலை இன்று மாலை அவர் வெளியிட்டுள்ளார்.
திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் ஐந்து பேரும், குறிஞ்சாங்கேணி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் இருவரும், கோமரங்கடவல சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட தெவனிபியவர பகுதியில் 16 வயதுடைய மாணவர் ஒருவருமாக எட்டு பேர் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறிஞ்சாங்கேணி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 45 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது வாகனம் திருத்தும் இடத்தில் வேலை செய்த 19 வயது மற்றும் 35 வயதுடைய இருவர் இனங்காணப்பட்டதாகவும், அவர்களுடன் நேரடியாக தொடர்புகளை வைத்திருந்த 11 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிஞ்சாங்கேணி சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எம்.எம்.அஜீத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இன்று புதன்கிழமை திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் 75 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், 62 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் திருக்கோணமலை சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் சையொழிபவன் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் திருகோணமலை மாவட்டத்தில் பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும், பொது மக்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக்கொள்ளும் நோக்கில் செயற்பட வேண்டும் எனவும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந் கோரியுள்ளார்.