மின்சாரம் தாக்கி இளைஞன் பலி: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
வவுனியா வடக்கில் வேலிக்கு பாய்ச்சிய மின்சாரத்தில் சிக்கி இளைஞன் ஒருவர் மரணமடைந்தமை தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட காணி உரிமையாளருக்கு எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு வவுனியா நீதிவான் நீதிமன்றினால் உத்தரவிடப்பட்டுள்ளது.
இளைஞர் உயிரிழந்த சம்பவ இடத்திற்கு பதில் நீதிவான் தி.திருஅருள் இன்று (11.04) சென்று பார்வையிட்டுள்ளார்.
பின்னணி
வவுனியா வடக்கு, சின்னடம்பன் பகுதியில் தொடர் யானைகள், பன்றிகளின் அச்சுறுத்தல் காரணமாக அங்குள்ள தோட்டக் காணி ஒன்றுக்கு வேலி போடப்பட்டு, மின்சாரம் வழங்கப்பட்டிருந்தது.
குறித்த வேலிக்கு வீட்டில் இருந்து முறையற்ற வகையில் மின்சாரம் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மரம் வெட்டுவதற்காக குறித்த வேலி ஊடாக சென்ற இளைஞன் மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் கனராயன்குளம், குறிசுட்டகுளம் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஆவார்.
குடும்பத்தினர் குற்றச்சாட்டு குறித்த பகுதியில் மரம் வெட்டுவதற்காக உயிரிழந்த இளைஞருடன் சிலர் சென்ற போது காணி உரிமையாளரிடம் வேலிக்கு மின்சாரம் செலுத்தப்பட்டுள்ளதா எனக் கேட்டதாகவும், இதன்போது அவர் இல்லை எனத் தெரிவித்த நிலையிலேயே குறித்த இளைஞன் வேலியால் சென்ற போது மின்சாரம் தாக்கி மரணித்ததாக இறந்த இளைஞனின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
இது தொடர்பில் கனராயன்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையில் வவுனியா நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் தி.திருஅருள் சம்பவ இடத்திற்கு சென்று நிலமையை பார்வையிட்டதுடன், இது தொடர்பான முழுமையான விசாரணைக்கும் உத்தரவிட்டார்.
பிரேத பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், முறையற்ற வகையில் மின்சாரம் செலுத்தியமை மற்றும் சம்பவம் தொடர்பில் காணி உரிமையாளர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு வவுனியா நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், மின்சார சபையால் குறித்த வீட்டுக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் கனகராயன்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
செய்தி: திலீபன்
முதலாம் இணைப்பு
வவுனியா வடக்கு - சின்னடம்பன் பகுதியில் யானைக்கு வைக்கப்பட்டிருந்த மின்சார வேலி தாக்கப்பட்டு இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்றைய தினம் (10.04.2023) இடம்பெற்ற இச்சம்பவத்தில், கனராயன்குளம் - குறிசுட்டகுளம் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய உலகநாதன் கஜந்தன் என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா வடக்கு, சின்னடம்பன் பகுதியில் தொடர் யானைகள், பன்றிகளின் அச்சுறுத்தல் காரணமாக அங்குள்ள தோட்டக் காணி ஒன்றுக்கு யானை வேலி போடப்பட்டிருந்தது.
விசாரணை
குறித்த வேலிக்கு மின்சாரம் வழங்கப்பட்டிருந்த நிலையில், அதனை அவதானிக்காது குறித்த வேலி ஊடாக நேற்றைய தினம் மாலை கஜந்தன் என்பவர் பயணித்துள்ளார்.
இதன்போது யானைக்கு வைத்த மின்சார வேலியில் சிக்கி அவர் உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை நெடுங்கேணி பொலிஸார்
முன்னெடுத்து வருகின்றனர்.
