நாடளாவிய ரீதியில் போதை மாத்திரைகளுடன் பலர் கைது
யாழ்ப்பாணம் - கோண்டாவில் பகுதியில் ஒரு தொகை போதை மாத்திரைகளை விற்பனை செய்து பணம் பெற்றுக்கொண்ட இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோண்டாவில் வீரபத்திரர் கோவிலை அண்டிய பகுதியில் இளைஞன் ஒருவர் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபடுவதாக கோப்பாய் பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவலின் பிரகாரம் அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார், போதை மாத்திரை விற்பனை செய்த குற்றசாட்டில் 23 வயதான இளைஞனை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த வேளை அவரது உடமையில் இருந்து ஒரு தொகை போதை மாத்திரை, அவற்றை விற்பனை செய்ததன் மூலம் பெற்றுக்கொண்ட பணம் என்பவற்றை மீட்டுள்ளனர்.
அதனை அடுத்து, கைது செய்யப்பட்ட இளைஞனை கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கல்முனை
ஹெரோயின் மற்றும் போலி நாணயத்தாள்களை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கல்முனை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினையடுத்து நேற்றிரவு கல்முனை காஸீம் வீதியில் வைத்து சந்தேகநபர் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதலில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் 39 வயது மதிக்கத்தக்கவர் என்பதுடன் சந்தேகநபர் தம்வசம் இருந்து 3 ரூபா 5000 போலிகள் உட்பட ஹெரோயின் போதைப்பொருள் 3 கிராம் 100 மில்லிகிராம் என்பன விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபர் சான்று பொருட்களுடன் கல்முனை பொலிஸாரிடம் விசேட அதிரடிப்படையினர் நீதிமன்ற நடவடிக்கைக்காக பாரப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட
வள்ளிபுனம் இடைக்கட்டு பகுதியில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று
பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டு அங்கிருந்து பெருந்திரளான கசிப்பு மற்றும்
கோடா என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.