பொலிஸாரின் கைத்துப்பாக்கியை பறித்துக்கொண்டு தப்பிஓடிய சந்தேகநபர்: பொலிஸாரின் புத்திசாதுரிய செயல்
கிளிநொச்சி - இராமநாதபுரம் பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரின் கைத்துப்பாக்கியை பறித்து கொண்டு கைவிலங்குடன் தப்பிச் சென்ற நிலையில் பொலிஸார் புத்தி சாதுரியமாகச் செயற்பட்டு அவற்றை மீட்டுள்ளனர்.
நேற்று மாலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
இராமநாதபுரம் பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் பொலிஸ் அதிகாரிகள் மூவர் நேற்று பிற்பகல் சட்டவிரோத மதுபானங்களை உடைமையில் வைத்திருந்தாக தெரிவித்து சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சந்தேகநபர் கைவிலங்குடன் பொலிஸாரின் கைத்துப்பாக்கியையும் பறித்துக் கொண்டு தப்பியோடியுள்ளான்.
குறித்த பகுதியில் அதிகளவான பொலிஸார் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுத் தேடுதல் மேற்கொண்ட போதும் குறித்த சந்தேகநபரை கைது செய்ய முடியவில்லை.
அதன்பின் சந்தேகநபரின் தாயார் மற்றும் கிராம மக்களிடம் நேற்று மாலை மேற்கொள்ளப்பட்ட பேச்சு வார்த்தையின் அடிப்படையில் தப்பியோடிய சந்தேகநபரிடமிருந்து கைத்துப்பாக்கி மற்றும் கைவிலங்கு என்பவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.