கருப்பு, வெள்ளை பூஞ்சைகளை தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ள மஞ்சள் பூஞ்சை!
இந்தியாவில் கருப்பு மற்றும் வெள்ளைப் பூஞ்சைகளைத் தொடர்ந்து தற்போது மஞ்சள் பூஞ்சை தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்தியாவில் கோவிட் தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது.
கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது குணமடைந்தவர்களிடையே கருப்பு பூஞ்சை தாக்குதல் அதிகரித்து வருகிறது தற்போது நாடு முழுவதும் 8 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கருப்பு பூஞ்சை தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதனிடையே உத்தரப் பிரதேசம், டெல்லி போன்ற இடங்களில் வெள்ளைப் பூஞ்சை தொற்றும் கண்டறியப்பட்டது. இது கருப்பு பூஞ்சையை விட கொடியது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் தற்போது காசியாபாத்தில் ஒருவருக்கு மஞ்சள் பூஞ்சை தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது கருப்பு மற்றும் வெள்ளைப் பூஞ்சைகளை விடக் கொடியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது மற்ற இரு பூஞ்சைகள் தாக்குதலை விட கடுமையாக உள்ளுறுப்புகளைத் தாக்கக் கூடியது என்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
மஞ்சள் பூஞ்சை உடலின் உட்புறமாகத் தொடங்குகிறது, உள்ளுறுப்புகளில் சீழ் கசிவை ஏற்படுத்தக் கூடியது. இது உறுப்பு செயலிழப்பிற்கும் வழிவகுக்கும் என்று வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர்.
அதிக அளவிலான ஸ்டெராய்டுகளை எடுத்துக்கொள்வது, சுற்றுப்புறத் தூய்மையின்மை, பாக்டீரியா எதிர்ப்பு மருந்துகள், சீரற்ற ஆக்ஸிஜன் பயன்பாடு போன்றவையே பூஞ்சை தாக்குதலுக்கு காரணம் என்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.