எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம் - யாழ்.மீனவர்கள் தொடர்பில் கையளிக்கப்பட்ட முக்கிய ஆவணம் (Video)
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் பாதிப்பால் கிடைக்கும் நட்டயீட்டை மீனவ மாவட்டங்களுக்கு பகிர்தல் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியில் இன்று(06.07.2023) இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் அகில இலங்கை மீனவ தொழிற்சங்கத்தின் பிரதிநிதிகளும், வடமாகாண மீனவ சங்க பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்தனர்.
இதன் போது கருத்து தெரிவித்த கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன முன்னாள் தலைவர் அ.அன்னராசா,
“இன்று வடக்கு மாகாணத்தோடு 15 கடலோர மாவட்டங்கள் இணைந்து மீனவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினை தொடர்பாகவும், இதனை எப்படி எதிர்கொள்வது என்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
கையளிக்கப்பட்ட ஆவணங்கள்
அதே போன்று இலங்கையிலே இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் பாதிப்புக்கு வழக்கு தொடர்வது சம்பந்தமாக கடந்த வாரம் இந்தக் கடற்றொழில் அமைப்பினர் ஒவ்வொரு மாவட்ட மீனவர்களோடும் கலந்துரையாடிச் சென்றனர்.
நீர்கொழும்பு சட்டத்தரணி நிமாலனி குணரட்ணம் அவர்களது தலைமையிலே எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ளது.
அதற்கு வடக்கு கடற்றொழில் சங்கங்களையும் ஒன்றிணைக்குமாறு நாங்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று சட்டத்தரணி இங்கு வருகை தந்திருந்தார்.
இதன்போது நடைபெற்ற கூட்டத்தில் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் பாதிப்பால் கிடைக்கும் நட்டயீட்டு விவகாரத்தில் எங்களையும் இணைப்பதற்கான ஆவணங்களை அவரிடம் கையளிக்கவும் இணக்கம் காணப்பட்டது என அ.அன்னராசா தெரிவிதுள்ளார்.




