உலக வங்கி இலங்கைக்கு வழங்கியுள்ள அங்கீகாரம்
உலக வங்கி குழுமம், இலங்கையை கீழ் நடுத்தர வருமான நாடு என்ற வகைப்பாட்டிலிருந்து மேல் நடுத்தர வருமான நாடு என்ற புதிய வருமானப் பிரிவுக்கு உயர்த்தியுள்ளது.
2025ஆம் ஆண்டில் இலங்கை 5 சதவீத உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை பதிவு செய்ததைத் தொடர்ந்து இந்த தர உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடி
கடந்த சில ஆண்டுகளாக கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட இலங்கை, தற்போது பொருளாதார வளர்ச்சி மற்றும் பொருளாதார நிலைத்தன்மையில் முன்னேற்றம் கண்டுள்ளதையே இந்த அங்கீகாரம் பிரதிபலிப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

உலக வங்கி நாடுகளை அவற்றின் தனிநபர் மொத்த தேசிய வருமானம் அடிப்படையில் நான்கு பிரிவுகளாக வகைப்படுத்துகிறது.
உயர்ந்த வருமான நாடுகள், மேல் நடுத்தர வருமான நாடுகள், கீழ் நடுத்தர வருமான நாடுகள், குறைந்த வருமான நாடுகள் என நாடுகள் வகையீடு செய்யப்படுகின்றன. இந்த வருமான வகைப்பாடுகள் ஆண்டுதோறும் புதுப்பிக்கப்படுகின்றன.
2025ஆம் ஆண்டில் பதிவான பொருளாதார மீட்சியும் வளர்ச்சியும் காரணமாக, உலக பொருளாதார தரவரிசையில் இலங்கை தனது நிலையை மேம்படுத்தியிருப்பது இந்த புதிய வகைப்பாட்டின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பொருளாதார நிபுணர்களின் கருத்துப்படி, இந்த தர உயர்வு இலங்கையின் சர்வதேச பொருளாதார நம்பகத்தன்மையை வலுப்படுத்துவதோடு, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கவும், பொருளாதார வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கவும் உதவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேவேளை, சலுகைக் கடன்கள் மற்றும் சில அபிவிருத்தி உதவித் திட்டங்களுக்கான தகுதிகளில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.