கோவிட் தொற்று எப்போது முடிவுக்கு வரும்? உலகின் முன்னணி பொது சுகாதார நிபுணர் வெளியிட்ட தகவல்
உலக நாடுகளில் மிக வேகமாக பரவி வரும் ஒமிக்ரோன் Omicron வகை கோவிட் வைரஸ் இந்த ஆண்டுக்குள் முடிவுக்கு வந்துவிடக்கூடும் என உலகின் முன்னணி பொது சுகாதார நிபுணர் ஜெர்மி பாரார் (Jeremy Farrar) தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவும் வேறு சில நாடுகளும் பெருமளவில் கோவிட் தடுப்பூசி வழங்கியுள்ளதாலும், கோவிட் பரவல் காரணமாக இயற்கை நோயெதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளதாலும் வலுவான நிலையிலிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஆகவே, அரசு கோவிட் கட்டுப்பாடுகளை நீக்க முயற்சிப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது என்றும், ஆனாலும், இன்னமும் மருத்துவமனைகளில் கூட்டம் நிரம்பி வழிந்துகொண்டு தான் இருக்கின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆகவே முழுமையாக அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்கிவிடுவதில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும், அதேபோல், மற்ற நாடுகள் பலவற்றில் போதுமான அளவில் தடுப்பூசிகள் வழங்கப்படாத நிலையில், அந்த நாடுகள் இன்னமும் அபாய நிலையிலேயே தான் உள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.