புலம்பெயர் அமைப்புக்களை தடை செய்த ஜனாதிபதியின் திடீர் மாற்றத்திற்கு காரணம் என்ன?
புலம்பெயர் அமைப்புக்களையும், புலம்பெயர் சமூகத்தைச் சேர்ந்த தனிநபர்களையும் தடை செய்த ஜனாதிபதியின் திடீர் மன மாற்றத்திற்கு என்ன காரணம் என உலகத் தமிழர் பேரவை கேள்வி எழுப்பியுள்ளது.
கடந்த மார்ச் மாதம் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களையும், சமூகங்களையும் தடை செய்வதாக அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில் தற்பொழுது புலம்பெயர் சமூகத்துடன் பேச வேண்டுமென ஜனாதிபதி கூறியிருப்பதன் காரணம் என்ன என உலகத் தமிழர் பேரவை கேள்வி எழுப்பியுள்ளது.
புலம்பெயர் அமைப்புக்களுடன் தொடர்பு பேண வேண்டும் என்ற ஜனாதிபதியின் நோக்கம் முற்போக்கானது என சுட்டிக்காட்டியுள்ளது.
ஜனநாயக ரீதியில் மக்களினால் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஜனாதிபதியை சந்திக்க சந்தர்ப்பம் கோரிய போதிலும் அதற்கு இதுவரையில் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளது.மாறாக பல்வேறு காரணங்களைக் கூறி இந்த சந்திப்பு நிராகரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.
இவ்வாறான ஓர் நிலையில் நியூயோர்க்கில் வைத்து புலம்பெயர் தமிழ் சமூகத்துடன் தொடர்பு பேண விரும்புவதாக ஜனாதிபதி கூறியிருப்பது ஆச்சரியமளிப்பதாகத் தெரிவித்துள்ளது.
உலகத் தமிழர் பேரவை அரசாங்கம் தடை செய்த காரணத்தினால் இலங்கை மக்களுடனான உறவுகளை துண்டித்துக்கொள்ளவில்லை என தெரிவித்துள்ளது.
அண்மையில் கூட பல மில்லியன் டொலர்கள் பெறுமதியான கோவிட் மருத்துவ உபகரணங்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டதாகவும் இது வடக்கு கிழக்கிற்கு மட்டும் அனுப்பவில்லை எனவும் தெரிவித்துள்ளது.
புலம் பெயர் அமைப்புக்கள் மற்றும் தனிப்பட்ட நபர்களை தடை செய்ததன் மூலம் நாட்டுக்கு சுமார் 300 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு நாணய வருமானம் இழக்கப்படுவதாக கணக்கிட்டுள்ளதாக உலகத்தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.
You My Like This Video