இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்தது என்ன? வெளியானது அறிக்கை
இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து சுமார் 12 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை உறுதி செய்வதற்கும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கும் உள்நாட்டு முயற்சிகள் தவறிவிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் ஆணையாளர் மிச்செலே பச்செலெட் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46வது கூட்டத்தொடர் இடம்பெற்று வரும் நிலையில், இன்று வெளியிட்டுள்ள இலங்கை தொடர்பான அறிக்கையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“நீதித்துறையின் சுதந்திரம், இலங்கை மனித உரிமைகள் ஆணையம், தேசிய பொலிஸ் ஆணையம் மற்றும் பிற முக்கிய அமைப்புகள் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள 20 வது அரசியலமைப்பு திருத்தத்தால் அழிக்கப்பட்டுள்ளன.
சிவில் செயல்பாடுகளின் வளர்ந்து வரும் இராணுவமயமாக்கல் ஜனநாயக ஆட்சியை ஆக்கிரமிக்கிறது. பாதுகாப்பு மற்றும் இராணுவ அதிகாரிகள் கடுமையான குற்றங்கள் மற்றும் மீறல்களில் சிக்கியுள்ளனர்.
தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுபான்மையினர் உயர் அதிகாரிகள் உட்பட பிளவுபடுத்தும் மற்றும் பாகுபாடான சொல்லாடல்களால் விலக்கப்படுகிறார்கள். கோவிட் - 19 தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை கட்டாயமாக தகனம் செய்வதற்கான கொள்கை சிறுபான்மை சமூகங்களுக்கு வேதனையையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் நீண்டகால, கட்டமைப்பு மற்றும் அமைப்பு ரீதியான பிரச்சினைகள் நீடிக்கின்றன, இந்நிலையில், சர்வதேச அளவில் பல்வேறுவகைப்பட்ட பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதற்கான புதியவழிவகைகள் குறித்து ஆராயுமாறு நான் மனித உரிமை பேரவைக்கு அழைப்பு விடுக்கின்றேன்.
கடந்தகாலத்தில் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களிற்கு பொறுப்புக்கூறலை முன்னெடுக்க மறுத்ததன் மூலமும் ஜெனீவா தீர்மானத்திற்கான ஆதரவை விலக்கிக்கொண்டதன் மூலமும் ஏனைய நடவடிக்கைகள் மூலமும் தேசிய நடைமுறைகள் மூலம் தண்டனையின் பிடியிலிருந்து விலக்கப்படுதலை முடிவிற்குகொண்டுவருவதற்கான நேர்மையான முன்னேற்றத்திற்கான கதவுகளை அரசாங்கம் அடைத்துவிட்டது.
இந்த காரணத்திற்காக நான் சர்வதேச அளவில் பல்வேறுவகைப்பட்ட பொறுப்புக்கூறலை முன்னோக்கி நகர்த்துவதற்கான புதியவழிவகைகள் குறித்து ஆராயுமாறு நான் மனித உரிமை பேரவைக்கு அழைப்பு விடுக்கின்றேன்.
எதிர்கால பொறுப்புக்கூறலிற்கான ஆதாரங்கள் மற்றும் தகவல்களை சேகரித்து பாதுகாப்பதற்கானநடவடிக்கைகளிற்கு ஆதரவை அளிக்குமாறும் உறுப்புநாடுகளில் பொருத்தமான நீதி நடைமுறைகளிற்கு ஆதரவளிக்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்துள்ளார்.