முஸ்லிம்களின் குரல்களுக்காக நாங்கள் ஏக்கத்தோடு காத்திருக்கிறோம்: கனடாவில் சுமந்திரன் வெளியிட்ட தகவல்
நாங்கள் இஸ்லாமியச் சகோதரர்களுக்காகக் குரல் கொடுக்கிறோம். அதேவேளையில் தமிழ் மக்களினுடைய உரிமைகளுக்காக முஸ்லிம் குரல்கள் எப்போது எழும் என நாங்கள் ஏக்கத்தோடு காத்திருக்கிறோம் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
கனடா வாழ் இலங்கை முஸ்லிம் சமூகத்தினருடனான சந்திப்பு ஒன்று நேற்று(புதன்கிழமை) ஒழுங்குபடுத்தப்பட்டது. இதன்போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில்,
நாங்கள் இருவரும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை நடைப்பயண போராட்டம் இடம்பெற்ற போது இரண்டாவது நாளாக காத்தான்குடிக்கு வந்தபோது முழு காத்தான்குடியும் திரண்டு வந்து சந்தித்தது. ஒரு அரசியல் தலைவர்களும் வரவில்லை.
அதைத் தொடர்ந்தது ஓட்டமாவடியிலும் அதே போன்ற ஒரு வரவேற்பு. கிண்ணியாவில் மட்டும் தான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் எங்களை வந்து சந்தித்து எங்களோடு பக்கத்திலே நின்று உரையாற்றினார். வேறொருவரும் வரத் துணியவில்லை.
நாங்கள் இஸ்லாமியச் சகோதரர்களுக்காகக் குரல் கொடுக்கிறோம். அதேவேளையில் தமிழ் மக்களினுடைய உரிமைகளுக்காக முஸ்லிம் குரல்கள் எப்போது எழும் என நாங்கள் ஏக்கத்தோடு காத்திருக்கிறோம்.
போராட்டத்தின் போது எங்களுடன் முஸ்லிம் சமூகத்தினர் நடந்து வந்தார்கள். ஆனால் அவர்களின் எல்லைகளோடு நின்றுவிடுவார்கள். அப்போது நான் "முழுத்தூரமும் எங்களுடன் நீங்கள் நடந்து வர வேண்டும்' என்று சொன்னேன்.
அது நடைப் பயணத்தில் மட்டுமல்ல. எங்களுடைய அரசியல் பயணத்திலும் எங்களுடன் கைகோர்த்து முழு தூரமும் வரவேண்டும். அப்போது தான் எங்களுடைய இரு சமூகங்களும் எங்களுடைய நாட்டிலே தலை நிமிர்ந்து வாழமுடியும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |