அதிகளவு பயணிகளை ஏற்றிச்செல்லும் பேருந்துகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
பேருந்துகளில் இருக்கைகளை விட அதிகமான பயணிகளை ஏற்றிச்சென்றால் இரண்டு வகையான பேருந்து கட்டணங்கள் அறிமுகப்படுத்தப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
அதாவது, அமர்ந்திருக்கும் பயணிகளுக்கு ஒரு கட்டணமும் நின்று கொண்டு செல்லும் பயணிகளுக்கு ஒரு கட்டணமும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
பேருந்து கட்டணம் அதிகரிக்கப்பட்டாலும், ஆசன விதிமீறல்கள் தொடர்வதால், நின்றுகொண்டு பயணிக்கும் பயணிகளுக்கு, கட்டண மறுசீரமைப்புக்கு முன்னர் அறவிட்ட கட்டணத்தை அறவிடும் வகையில் புதிய முறையொன்று அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
அதன்படி அடுத்த வாரம் முதல் இரண்டு கட்டண முறைகளில் போக்குவரத்து சேவைகள் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இருக்கைகளுக்கு ஏற்ப பயணிகளை ஏற்றிச் செல்லும் விதிமுறைகளை மீறும் அனைத்து பேருந்துகளையும் பறிமுதல் செய்யுமாறு கடந்த வாரம் பொலிஸ்மா அதிபருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் பெரும்பாலான பகுதிகளில் இந்த உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும்,சில பகுதிகளில் இந்த விதிமுறை மீறப்படுவதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.