கறுப்பு பூஞ்சை நோய் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை
மியூர்கோமைகோசிஸ் என்ற பெயரைக்கொண்ட கறுப்பு பூஞ்சை நோய்க்கு உடனடி மருத்துவ உதவி பெறப்படாவிட்டால், கண்கள் மற்றும் மூளைக்கு சேதம் ஏற்படலாம் என்று மருத்துவ நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆலோசகரான, ப்ரிமாலி ஜெயசேகர இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டில் இதுவரை 12 கோவிட் நோயாளிகளுக்கு கறுப்பு பூஞ்சை இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
2021, ஜூன் மாதம் முதல் இதுவரை, இரத்தினபுரியில் இருந்து இரண்டு நோயாளிகள், திருகோணமலை பொது மருத்துவமனையிலிருந்து மூன்று நோயாளிகள், கொழும்பு தேசிய மருத்துவமனையில் இருந்து நான்கு நோயாளிகள் மற்றும் கராப்பிட்டிய, இரத்தினபுரி மற்றும் களுபோவில போதனா மருத்துவமனைகளில் இருந்து தலா ஒருவர் பதிவாகியுள்ளனர் என்றும் கூறியுள்ளார். அவர்கள் அனைவரும் நீரிழிவு நோயாளிகளாவர்.
எனவே, நீரிழிவு நோய் உள்ளவர்கள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவது எப்போதும் முக்கியம் என்றும் வைத்தியர் ஜெயசேகர வலியுறுத்தியுள்ளார்.
பூஞ்சை, மனிதரில் மூக்கு மற்றும் கண்களைச் சுற்றி தென்படும். கறுப்பு பூஞ்சையால் பாதிக்கப்படும் போது முகத்தில் வலியும் இருக்கலாம் என்று அவர் கூறியுள்ளார்.
இந்த நோய் ஒருவருக்கொருவர் பரவாது என்றும்,மேலும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் இந்த நோயால் பாதிக்கப்படுவார்கள் என்றும் கூறியுள்ளார்.