திட்டமிட்ட குடியேற்றங்களால் கிழக்கில் தமிழர்களின் விகிதம் வீழ்ச்சியடைந்துள்ளது: வியாழேந்திரன் (Photos)
கிழக்கில் மூவின மக்களும் வாழ்ந்து வந்தாலும், தமிழ் மக்களின் பிரச்சினைகள் அதிகம் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. அவைகளைத் தீர்த்து வைக்கவேண்டிய பொறுப்பு மக்கள் பிரதிநிதிகளிடத்தில் உள்ளது என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (29.06.2023) மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், மக்களுடைய உரிமை சார்ந்த விடையத்தில் நாங்கள் மிகவும் கவனமாக இருக்கின்றோம்.
அபிவிருத்தி சார்ந்த விடயங்கள்
இந்த மாகாணத்தைப் பொறுத்தளவில், ஒரு வலிமையான அரசியல் கட்டமைப்பை உருவாக்குவதன் மூலமே எங்கள் இனத்தினுடைய இருப்பை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்ற தீர்க்கமாகக் கொள்கையுடன் பயணிக்கின்றோம்.
எனவே, உரிமை சார்ந்த விடயத்தில் எவ்வளவு விவேகமாகப் பயணிக்கிறோமோ, அதற்குச் சமமாக அபிவிருத்தி சார்ந்த விடயத்திலும் நாங்கள் கவனம் செலுத்துகிறோம்.
மாவட்டத்தின் அபிவிருத்தி சார்ந்த விடயங்களும் உரிமைக்குச் சமமாக முன்னெடுக்கப்படல் வேண்டும். கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மையாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் தமிழர்கள்.
தமிழர்களின் இன விகிதாசாரம்
பல திட்டமிட்ட குடியேற்றங்களால் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் இன விகிதாசாரம் வீழ்ச்சியடைந்து வருகின்றது.
எனவேதான் எமது மக்களுடைய உரிமை சார்ந்த விடயங்களுக்குச் சமமான அபிவிருத்தி சார்ந்த வேலைத் திட்டங்களையும் முன்னெடுக்க வேண்டிய தார்மீக பொறுப்பு எம்மிடம் சுமத்தப்பட்டுள்ளது.
அதுபோல் கல்வி, சுகாதாரம், உள்ளிட்ட பல விடயங்களிலும் பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளோம்.
கிழக்கு மாகாணத்தில் 58.9 சதவீதமாகவிருந்த தமிழர்கள், தற்போது 38.6 சத வீதத்திற்கு வந்திருக்கின்றார்கள். இதற்குக் காரணம் கடந்த காலத்திலே மேற்கொண்டிருந்த திட்டமிட்ட குடியேற்றங்களாகும்.
இனங்களை சமமாக மதித்து வேலை
இந்நிலையில், வரலாற்றிலே கிழக்கு மாகாணத்தில் தமிழர் ஒருவர் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கவில்லை. தற்போதுதான் ஜனாதிபதி தமிழர் ஒருவரைக் கிழக்கு மாகாணத்தின் ஆளுநராக நியமித்திருக்கின்றார். இது வரவேற்கக் கூடிய விடையமாகும்.
நாம் இன்னுமொரு இனத்தின் உடைமைகளைத் தட்டிப்பறிக்க வில்லை, மாறாக எமது இனத்தினுடைய விடயங்களை விட்டுக்கொடுக்கவும் தயாரில்லை.
தற்போதைய ஆளுநர் செந்தில் தொண்டமான் அனைத்து இனங்களையும் சமமாக மதித்து வேலை செய்து கொண்டு வருகின்றார்.
ஆனால், முன்னாள் கிழக்கு மாகாணத்தின் ஆளுநராக இருந்த பெண்ணின் செயற்பாடுகள் ஒரு இனத்தை மாத்திரம் வைத்துச் செயற்படுத்தியதாகக் காணப்பட்டது.
இதுகுறித்து முன்னாள் ஜனாதிபதி, தற்போதைய ஜனாதிபதியுடனும் பேசியிருந்தோம்.
தொல்பொருள் திணைக்களம்
கிழக்கில் மூவின மக்களும் வாழ்ந்து வந்தாலும், தமிழ் மக்களின் பிரச்சினைகள் அதிகம் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. அவைகளைத் தீர்த்து வைக்க வேண்டிய பொறுப்பு மக்கள் பிரதிநிதிகளிடத்தில் உள்ளது.
நான் ஆளும் கட்சியில் இருந்தாலும் தவறுகளைச் சுட்டிப்பாட்டிக் கொண்டு மக்களுக்குச் சார்பாகத்தான் செயற்பட்டு வருகின்றேன்.
மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை, தொல்பொருள் திணைக்களம் போன்றவற்றின் திணைக்களத் தலைவர்கள் மேல்மட்ட உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவதில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதன்போது மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், போரதீவுப் பற்றுப பிரதேச செயலாளர் ஆர்.இராகுலநாயகி, மற்றும் அரச உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

இஸ்ரேல் முற்றாக அழிக்கப்பட்டிருக்கும், அமெரிக்காவால் தப்பியது: ஈரானின் உயர் தலைவரின் பதிவு News Lankasri
